கனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு!!
சென்னை : திமுக எம்பி கனிமொழிக்கு நேர்ந்தது போன்று எனக்கும் நேர்ந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டில் மொழி பாரபட்சத்தை மத்திய அரசு காட்டி வருகிறது. தொலைபேசி உரையாடல் மற்றும் நேருக்கு நேர் பேசும்போது இந்தியில்தான் பேச வேண்டும் என்று என்னையும் வலியுறுத்தி உள்ளனர் என்று ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் பேசிய சிஐஎஸ்எப் பாதுகாவலரிடம், ''ஆங்கிலத்தில் பேசுங்கள், இந்தி எனக்குப் புரியாது'' என்று கனிமொழி கூறியபோது, ''நீங்க இந்தியரா'' என்று சிஐஎஸ்எப் அதிகாரி கேட்டதாகவும், ''எப்போதிருந்து இந்தி அறிந்து கொள்வது இந்தியராக இருப்பதற்கு தகுதியானது'' என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார்.
இவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாக பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது பதிவில், ''திமுக எம்.பி கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவம் மிகவும் அசாதாரணமானது. வெறுப்பை விளைவிக்கும் அனுபவம் என்று கூறி இருந்தார். அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரது பதிவில், ''இதேபோன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில், நேரில் பேசும்போது இந்தியில் பேசுங்கள் என்று என்னை அரசு அதிகாரிகள் மற்றும் சாதாரண இந்திய பிரஜ்ஜைகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசு பணியில் அமர்த்தப்படும் இந்தி பேசுபவர்கள் ஏன் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளக் கூடாது'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
இதேபோல் தானும் எம்பி கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமியும் பதிவிட்டுள்ளார். ''இந்தி ஆளுமை, இந்தி அரசியல், இந்தி ஆதிக்கம் போன்ற காரணங்களால் தென்னிந்தியர்கள் பணி வாய்ப்பை இழந்து வருகின்றனர். தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இந்தி அரசியலால் பிரதமர் வாய்ப்பையும் இழந்துள்ளனர். கருணாநிதி, தேவகவுடா, காமராஜர் ஆகியோரும் பிரதமர் பதவியை இழந்துள்ளனர்.
தேகவுடா பிரதமராக இருந்தபோது டெல்லி செங்கோட்டையில் கட்டாயப்படுத்தி இந்தி பேச சொன்னார்கள். பீகார், உத்தரப்பிரதேசம் விவசாயிகளை மனதில் வைத்து தேவகவுடாவும் இந்தியில் பேசினார். இந்த மாதிரிதான் இந்தி அரசியல் இந்தியாவில் நீட்டித்து வருகிறது. நானும் இரண்டு முறை எம்பியாக இருந்துள்ளேன். அப்போது எல்லாம் கன்னட மொழியை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் கன்னட பேச்சை நிராகரித்தனர். இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து செல்லும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவையில்லாதவர்களாக உள்ளனர். கன்னடர்களுக்கு மத்திய அரசுப் பணியும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியை உலக அரங்கில் பிரபலப்படுத்த மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி பணத்தை செலவிட்டு வருகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.