சுதாரிக்காவிட்டால்.. மேலும் மேலும் கட்சி கரைந்தால்.. அரசியலில் அடுத்த விஜயகாந்த்.. தினகரன்தான்!
சென்னை: டிடிவி தினகரன், அடுத்த விஜயகாந்த் ஆகிவிட போகிறாரோ என தெரியவில்லை. எப்படி தேமுதிக கரைந்து.. கட்டெறும்பானதோ, அதுபோலவே அமமுகவும் கரைந்து வருகிறது.
அதிமுக ரெண்டா உடைஞ்ச பிறகு, யார் பக்கம் போவது என்று முக்கிய தலைகள் திணறின. ஆனாலும் எதுக்கு வம்பு என்று அதிமுக பக்கமே நிறைய பேர் தங்கி விட்டனர்.
ஆனால் எப்போது தினகரன் ஆர்கே நகரில் வெற்றி பெற்றாரோ, அவர் மவுசு கூடியது. பெரும்பாலானோர் தினகரனுக்கு ஆதரவு தர ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர்தான் மைக்கேல் ராயப்பன். இவர் ஏற்கனவே தேமுதிகவில் இருந்தவர். சினிமாக்காரர். விஜயகாந்துக்கு நெருக்கம். அதனால்தான் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் தந்தார் விஜயகாந்த்.
இதுக்குதான், ஊருக்குள்ள ஒரு எச். ராஜா இருக்கணும்கிறது..பாரதி தலைப்பாகை.. கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி
தோல்விதான்
ஆனால் இவர் தினகரன் கட்சிக்கு மாறியதும், அமமுகவுக்கே பெரிய பலமாக இருப்பார் என்றும், அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு பெரிய சக்தியாக உருமாறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, தினகரனும் இவரை முழுமையாக நம்பி தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட வைத்தார். ஆனால் அமமுகவுக்கு எதிர்பாராத வகையில் சின்னம் உட்பட பல பிரச்சனைகள் வந்தன, தோல்வியையும் தழுவியது.
ஓட்டு மிஷின்
எப்போது ரிசல்ட் வந்ததோ அப்போதே அமமுகவுக்குள் பூசல் எழ ஆரம்பித்துவிட்டது. ஓட்டு மிஷின் பிரச்சனை என்பதை ஓரளவுக்கு ஏற்று கொண்டாலும், எல்லா கோபமும், வருத்தமும் தினகரன்மீதுதான் அமமுக முக்கிய புள்ளிகளுக்கு திரும்பியது. சலசலப்பு உருவாக ஆரம்பித்தது. தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் இருவரும் அதிமுகவினரால் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். எல்லாருடைய கவனமும் இவர்கள் மீதே இருக்கும்போதுதான், திடீரென மைக்கேல் ராயப்பன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார்.
உட்கட்சி பூசல்
இவர்கள் அதிருப்திக்கு என்னதான் காரணம்? எதிர்காலத்தையே தொலைத்து நம்பி நின்ற 18 பேரின் கதி என்னாயிற்று? எங்கே தவறு நடந்துள்ளது? உள்கட்சி பூசல் நிலவுகிறதா, அமமுக முக்கிய நிர்வாகிகளின் விருப்பங்களை கேட்டு நடப்பதில்லையா? செலவுகளை அவர்கள் தலையில் கட்டிவிட்டு அமமுக ஒதுங்கி கொண்டதா? அல்லது எல்லா விஷயத்திலும் தன்னிச்சையான முடிவையே தினகரன் எடுத்துவருகிறாரா? இதில் ஏதோ ஒன்றில் காயம் பட்டுதான் இவர்களது விலகல் ஆரம்பமாகி உள்ளது. இதை முதன்முதலில் புரிந்து கொண்டு வெளியேறியவர் செந்தில்பாலாஜிதான்.
மைக்கேல் ராயப்பன்
அன்று செந்தில் பாலாஜி.. இன்று மைக்கேல் ராயப்பன்.. என்று பட்டியல் ஆரம்பமாகி உள்ளது. அன்றைக்கு தேமுதிக எம்எல்ஏக்களாக இருந்த வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் உள்பட பலரை இப்படித்தான் கைநழுவி விட்டுவிட்டார் விஜயகாந்த். இதே மைக்கேல் ராயப்பன் கூட தேமுதிக தலைமை மீது கொண்ட அதிருப்தியால்தான் விலகி ஓடினார். அன்று கரைய ஆரம்பித்த கட்சிதான் அது! அதுபோல அமமுகவுக்கும் உருவாகி விடக்கூடாது.
சுதாரிப்பு
விஜயகாந்த் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்து வளர்ந்தது தேமுதிக. அதுபோலவே சசிகலா என்ற பிம்பத்தை நம்பி உருவானது அமமுக. விஜயகாந்த்தின் உழைப்பு, விஜயகாந்தின் ஈர மனசு, விஜயகாந்தின் துணிச்சல், விஜயகாந்தின் அப்பட்டமாக பேசும் பேச்சு, என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்டிடமே சரிந்து நொறுங்கி கொண்டிருக்கிறது. அதுபோல அமமுகவுக்கும் நிலைமை வந்துவிடக்கூடாது. உடனடியாக தினகரன் சுதாரிப்பது நல்லது. இல்லாவிட்டால் அரசியலில் தினகரன் இன்னொரு விஜயகாந்த் என்பதில் சந்தேகமே இல்லை.