2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Recommended Video
சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியையும் ,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் அதிமுக மீதான டெல்லியின் நம்பிக்கை குறையத் தொடங்கியது. பின்னர் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதியிலாவது அதிமுக வெற்றிபெற்றுவிடும் என பாஜக தலைமை எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை.
இதனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.மீதான நம்பிக்கையை கிட்டதட்ட டெல்லி இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
நிரூபிக்க முயற்சி
இந்நிலையில், நடைபெறவுள்ள 2 தொகுதி இடைத்தேர்தல் மூலம் தனது பலத்தை பாஜக தலைமைக்கு உணர்த்த வேண்டும் என நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடியிடம் நிரூபிக்க வேண்டும் என முனைப்பில் உள்ளார் அவர்.
தீவிர தேர்தல் பணி
இதற்காக 2 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு, அமைச்சர்களிடம் சில கட்டளைகளும் போட்டுள்ளார். வெற்றிபெற்றாக வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள், ஏனோதானோ என வேலை செய்யாதீர்கள் என அறிவுரையும் கூறியுள்ளாராம். அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டாலின் அறிவிப்பு
இதனிடையே விக்ரவாண்டி தொகுதியை பொறுத்தவரை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்ததாம். இடையே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, ஏ.ஜி.க்கு மணிமண்டபம் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதும், விக்ரவாண்டியை 2 நாட்கள் வளைய வந்ததும் அங்கு கள நிலவரத்தை மாற்றியுள்ளதாம். இது தொடர்பாக அந்தத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், விவரத்தை சொல்லி இன்னும் தீயாக உழைக்கவேண்டும் எனக் கூறினாராம்.
முக்கியத்துவம்
நாங்குநேரியை பொறுத்தவரை எதையும் கணிக்க முடியாத சூழல் தான் இருக்கிறதாம். காங்கிரஸ் வேட்பாளர் தானே எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்ற அதிமுகவின் நினைப்பை ஸ்டாலின் தவிடுபொடியாக்கி விட்டாராம். திமுக வேட்பாளருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போலவே கூட்டணிக் கட்சி வேட்பாளர் வெற்றிக்கும் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
எச்சரிக்கை
மேலும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் அதிமுகவுக்கு இணையாக செலவு செய்கிறார். இதனால் நாங்குநேரியில் சரிசமமான ரேஸ் நடக்கிறதாம். இந்தத் தகவலும் முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கவில்லை என்றால், டெல்லி நமக்கு மரியாதை தராது. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர்களுக்கு எச்சரித்துள்ளாராம்.