முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச 6 பேருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 6 பேர் பேசுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கொடநாடு கொள்ளை தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் அவரின் ஆவணப்படமும், அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.
முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பின. ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. 1.10 கோடி ரூபாய் கேட்டு முதலமைச்சர் தரப்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் இடைக்கால உத்தரவை கோர்ட் பிறப்பித்தது.
அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ், ஜிபின் பொலியன் குடான், ஜிஜியா அனில், ஷிவானி ஆகிய 6 பேரும் பேசுவதற்குத் தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.