மோடிஜி… தமிழகம் சார்பாக பாராட்டு தெரிவிச்சுக்கிறேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
சென்னை:பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.
அதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முசாபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலை இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந் நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை எதிர்த்து, அதை வேரோடு அழிப்பதற்கு எடுத்திடும் நடவடிக்கைகளில் வெற்றிகள் பல கண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக, இன்றைய தினம் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்திய விமானப்படைகளின் வீரம் பாராட்டத்தக்கது. இந்தியப் படையினரின் துணிச்சலான, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை போற்றத்தக்கது. இதை சாதித்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 26, 2019
பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்திய விமானப்படைகளின் வீரம் பாராட்டத்தக்கது. இந்தியப் படையினரின் துணிச்சலான, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை போற்றத்தக்கது. இதை சாதித்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.