திடீரென ரத்து செய்யப்பட்ட முதல்வரின் ஆய்வு கூட்ட நிகழ்ச்சிகள்.. பின்னணி என்ன?
சென்னை: மாவட்டம் தோறும் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆய்வு கூட்ட நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 23ம் தேதியன்று பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தவுள்ளதால், இதில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. எனவே முதல்வரின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 22ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும் முதல்வர் பங்கேற்கிறார்.
நகரங்களில் 100 நாள் வேலை... சுகாதார துறைக்கு ரூ5,000 கோடி: தமிழக அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை
தூத்துக்குடி, கன்னியாகுமரி
22ம் தேதி பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்திலும், 23ம் தேதியன்று கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.
நாளை ஆய்வு கூட்டம்
முதல்வர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்து நாளை காலை மதுரையிலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டம் அறிவிப்பு இல்லை
இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப். 18ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆய்வு குழு பணிகளுக்கு மத்தியில் முதல்வர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் இன்று மீண்டும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வழியாக ராமநாதபுரம் செல்கிறார். ஆனால் அதன்பிறகான மற்ற மாவட்ட கூட்டங்கள் எப்போது என்பது அறிவிக்கப்படவிலலை
ஒத்திவைப்பு பின்னணி
ஏனெனில் 23ம் தேதி பிரதமர் மோடியுடன் மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால் அதற்காக முதல்வர் தயாராகி வருகிறார். இதேபோல் 28ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளதால் அதன்பிறகே மாவட்ட ஆய்வு கூட்டங்கள் வேகமெடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையே திமுக சமூக வலைதளங்களில் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதற்காக அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர்விவகாரத்திற்கு செப்டம்பர் 28ம் தேதி முடிவு கிடைத்துவிட்டால் அதிமுக முழு பாய்ச்சலோடு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதன்பிறகே அதிமுக தீவிரமாக இறங்கும் என தெரிகிறது.