உலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சீன அதிபர் சென்னை வருகை விவகாரத்தில் எந்தக்குறையுமின்றி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்தமைக்காக பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியுள்ளார்.
சீன அதிபர் சென்னை வருகைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முன்னேற்பாடு பணிகளை செய்யத் தொடங்கியது தமிழக அரசு.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், மோடியும் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசியதன் மூலம், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது தமிழகம்.
உற்சாகம்
சென்னையில் இருந்து நேற்று டெல்லி புறப்படும் முன்னர் விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்த மோடி awesome arrangements (அற்புதமாக ஏற்பாடுகள்) என பாராட்டினாராம். இதனால் புளங்காகிதம் அடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதே உற்சாகத்தில் விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய பறந்தார்.
பெருமிதம்
இந்நிலையில் இது தொடர்பாக உடனடியாக தலைமைச்செயலாளர், டிஜிபி, மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை தாமே தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக நன்றி தெரிவித்ததுடன், மோடி பாராட்டி விட்டு சென்றதையும் அவர்களிடம் கூறி பெருமைப்பட்டுள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியில் கூட இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு சென்னையில் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.
கணிப்பு
மேலும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக கருதப்படும் ஜி ஜின்பிங்கும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மலர்கொத்தை வாங்கியவாறே ஏதோ பேசிவிட்டுத் தான் சென்றார். அவர் கை அசைவு மற்றும் முக மலர்ச்சியை பார்த்தபோது தமிழகத்தின் விருந்தோம்பல் பற்றி பேசியிருக்கக்கூடும் என்கின்றனர் அதிகாரிகள்.
பெருமை
இப்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரிடம் ஸ்கோர் செய்த எடப்பாடி பழனிசாமி விக்ரவாண்டியில் மிகுதியான உற்சாகத்தில் காணப்படுகிறாராம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் நமது அரசு வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதாக பெருமிதப்படுகிறாராம்.