ஜெயலலிதா நினைவிடம் திறப்புவிழா... அழைப்பிதழுடன் டெல்லி செல்கிறார் முதலமைச்சர்..!
சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமருக்கு வழங்குவதற்காக அடுத்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா காணும் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் அதிமுகவினர் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே முதல்வர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக ரூ.50 கோடி மதிப்பில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவிலான பிரம்மாண்ட நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக படிபடியாக நடைபெற்ற கட்டுமானப் பணி இப்போது தான் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அதனை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மெரினா
மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்பதால், அதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் என விரும்புகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் பிப்ரவரி மாதமே ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது. பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது கவனிக்கத்தக்கது.
நேரில் சந்திப்பு
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என விரும்பும் அதிமுக தலைமை அதற்கான அழைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்தவாரம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டி அழைப்பு விடுக்கவுள்ளார்.
அடுத்த வாரம்
டெல்லி பயணம் இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்ளிட்டோருக்கும் நேரடியாக சென்று முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர் வரும் 18-ம் தேதியோ அல்லது அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளிலோ டெல்லிக்கு பயணம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.