எடப்பாடியாரின் டிவிட்.. தமிழை கொடுத்து இந்திக்கு வாசல் திறக்கிறார்கள்.. திருமாவளவன் பொளேர்!
சென்னை: பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது இந்திமொழிக்கு தமிழகத்தில் வாசல் திறக்கிறார்கள் என்று அர்த்தம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கம் இன்றுதான் சற்று குறைந்துள்ளது. இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் மும்மொழி கொள்கையை திரும்பப்பெற்றது மத்திய அரசு.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிவிட்டுள்ள டிவிட் பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார்.
திருமாவளவன் மரியாதை
இதுகுறித்து தலைவர்கள் பலரும் தங்களின்கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் காயிதேமில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது,
மதசார்பற்ற சக்திகளே காரணம்
தமிழகத்தில் மதவெறி சாதி வெறி அரசியலுக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. திமுக கூட்டணி இமாலய வெற்றி பெற மதசார்பற்ற சக்திகளே காரணம்.
இந்த நாளில் உறுதியேற்போம்
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதேமில்லத். மதவெறி மற்றும் சாதி வெறிக்கு எதிராகவும் இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இந்தியை ஏற்க வாசல் திறக்கிறார்
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற ட்விட் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் முதல்வர் இப்படி கூறுகிறார் என்றால் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள வாசல் திறக்கிறார் என்றே அர்த்தம்.
எதை எதிர்த்தாரோ அதையே பூசுவது
இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டம் பெரும் நிலை உள்ளது. இது வரும் காலத்தில் தமிழ் மொழி அழிய வகை செய்யும். எனவே இதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். எந்த கொள்கையை பாரதி எதிர்த்தாரோ அதையே அவர் மீது பூசுவது அவருக்கு எதிரானது.
பாரதியை அவமதிப்பதற்கு சமம்
எச்.ராஜா ஓவியர் வரைந்தது என்று கூறுவது மழுப்பலான பதில். இது பாரதியை அவமானம் செய்வதற்கு சமம். ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு என்பது அவர்கள் விரும்பும் கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலையில் உள்ளது. இது மெல்ல மெல்ல தமிழை அழிக்கும் எனவே தமிழக அரசு இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாரதியை கொச்சைப்படுத்தும் செயல்
பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் மறைந்திருக்கும் நோக்கம் என்ன என்றும் இதன் மூலம் தமிழக அரசில் காவி எந்த அளவு உள்ளது என்பதையும் காட்டுகிறது. இது ஒரு தமிழர் விரோத நடவடிக்கை மட்டுமல்ல இது பாரதியை கொச்சைப்படுத்தும் செயல் இழிவுபடுத்தும் செயல்.
நழுவல் வாதம்தான்
மும்மொழி வரைவு அறிக்கை என்பது ஒரு முன்னோட்டம் தான் தமிழகத்தில் எதிர்ப்பை தொடர்ந்து விருப்பப்படி மாணவர்கள் படிக்கலாம் என்று கூறி இருப்பதும் ஒரு நழுவல் வாதம் தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறினார்.