சென்னை டூ மதுரை... ஒரே விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -மு.க.ஸ்டாலின் பயணம்..!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் இருந்து மதுரை வரை ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக அவர்கள் இருவரும் இன்று மாலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கு தங்குகிறார்கள். நாளை காலை கார் மூலம் சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்ட பின்னர் திமுகவுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கியுள்ளது. அப்போது அங்கு செல்லும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்.
முன்னதாக இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே விமானத்தில் அவர்கள் பயணம் செய்வதால் மதுரை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க திமுகவினரும், அதிமுகவினரும் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை விமான நிலையத்தில் இரு கட்சியினரையும் சமாளிக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.