இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கொண்டு வந்த பின்னர், அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு வெறும் 6 பேர் மட்டுமேஅரசு பள்ளிகளில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது.இந்த சட்டத்திற்கு நீண்ட நாளைக்கு பிறகு, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
திமுகவில் சென்னை மேற்கு மாவட்டம் 2-ஆக பிரிப்பு... மறைந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளருக்கு வாய்ப்பு..!
அரசு பள்ளி மாணவர்கள்
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கி உள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 404 பேர் சேரும் நிலை உருவாகி உள்ளது.
தடைகளை தாண்டி நிறைவேற்றம்
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் தற்போது ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்கியுள்ளது.
1990 எம்பிபிஎஸ் இடங்கள்
தமிழகத்தில் நான் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு 1990 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வெறும் 6 பேர் மட்டுமே அரசுப்பள்ளிகளில் பயின்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர். தற்போது சட்டத்தால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 404 பேர் சேரும் நிலை உருவாகியுள்ளது.
மருத்துவக் கனவு நிறைவேற்றம்
இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நன்னாள், அரசுப் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம்" இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் போது கூறினார்.