கொரோனா உச்சத்தை தொட்டுத்தான் படிப்படியாக குறையும்... 75000 படுக்கைகள் தயார் - முதல்வர்
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்றும் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டுத்தான் படிப்படியாக குறையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடங்கி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் வைரஸ் பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் நடமாடுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணமடைந்த சம்பவம்.. ரூ 20 லட்சம் நிவாரணம், அரசு வேலை- முதல்வர்
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 75000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
வீடு வீடாக பரிசோதனை
சென்னையில் பல லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகிய தெருக்களில் வசிப்பதால் கொரோனா எளிதாக பரவுகிறது. வீடு வீடாக பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
பொது முடக்கத்தின் அவசியம்
பொதுமுடக்கம் தளர்வுகளுடன் இருந்த நிலையில் பல மாவட்டங்களில் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே மீண்டும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பொது முடக்கம் உள்ள பகுதிகளில் ரூ. 1000 நிவாரணம் அளிக்கப்படுகிறது. மதுரையிலும் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.
சுய பாதுகாப்பு
கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதற்காக அதிக அளவில் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்கிறோம். பொதுமக்கள் வெளியே சென்றால் முககவசம் கட்டாயம் அணியவேண்டும். கடைகள், வங்கிகள் என வீட்டை விட்டு வெளியே சென்றால் சமூக இடைவெளி அவசியம். கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அனைவருக்கும் நன்றி
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 6 அமைச்சர்கள் சென்னையில் 15 மண்டலங்களில் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறினார். கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ள முதல்வர், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.