சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்
சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மழை நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் திட்டம் அமைக்கப்படும் என்றார்.
நிவர் புயல் ஓய்ந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் சென்னையின் புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.
இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளில் தேங்கி மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அரசும் அந்தபகுதிகளில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
புறநகர் பகுதி
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேளச்சேரி
மழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மழை நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் திட்டம் அமைக்கப்படும் என்றும் இதற்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
சதுப்புநிலம்
முட்டுக்காடு சதுப்பு நில முகத்துவாரத்தை 30 மீட்டரில் 200 மீட்டராக அதிகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. நமது நாட்டில் எந்த மாநிலத்திற்கும் போதிய நிதி இல்லை. நிதி ஆதாரத்தை பொறுத்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகள் அதிகரிப்பு
அரசின் நடவடிக்கையால் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் தற்போது வெள்ளம் குறைந்துள்ளத. 2015ம் ஆண்டு மட்டுமல்ல், அதற்கு முன்பிருந்தே சென்னையில் மழை நீர் தேங்கி கொண்டிருக்கிறது. நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழை நீர் தேங்குகிறது. 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம் நகரில் 20 சதவீதமாக இருந்த வீடுகள் எண்ணிக்கை தற்போது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்றார்.
மழை நீர் சேமிப்பு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரி மதகை முடியாமல் நிறைய நீர் வீணாகிவிட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழையில் அடித்துவரப்பட்ட கட்டை சிக்கியதால் செம்பரம்பாக்கம் ஏரி மதகை மூட முடியாமல் இருந்தது. தற்போது சரிசெய்யப்பட்டு அங்கு மழை நீர் சேகரிக்கப்படுகிறது என்று கூறினார்.