முதல்வர் ஸ்டாலின் ஒரு முயற்சி எடுத்தால்.. அண்ணாமலை வேறு முயற்சி.. பாராட்ட வேண்டிய மாற்றங்கள்
சென்னை: சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பெற வேண்டும் எனில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல மாநிலங்கள் திரும்ப பெற வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் முயற்சி எடுத்தார் அதே பாணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முயற்சி எடுத்துள்ளார். ஆரோக்கியமான இந்த போட்டியை பலர் பாராட்டி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல்வேறு மாநிலங்கள் விலக்கினால் தான் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது,.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத்தடையை மறுபரிசீலனை செய்திடுவீர்!" டெல்லி - ஒரிசா - ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய 4 மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதினார்.
'திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி.. தேர்தல் ஆணையம் காட்டிய விஸ்வாசம் இருக்கே..' அண்ணாமலை நறுக்
தடை நீக்கம்
முதல்வர் ஸ்டாலினின் இந்த வேண்டுகோளை ஏற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சிவகாசி பசுமைப் பட்டாசுகளை இராஜஸ்தான் மாநிலத்தில் வெடிப்பதற்கு இருந்த தடையைநீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் , நேற்று இரவு விடுத்த அறிக்கையில் , இராஜஸ்தான் முதலமைச்சருக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழில்
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, நான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்திற்கு இப்பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கக்கூடிய இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் உங்கள் கனிவுமிகு நடவடிக்கை ஒளியேற்றும்" என்று கூறியிருந்தார்.
கடிதம் எழுதினார்
இந்நிலையில் திமுக அரசு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட மறுநாளே பாஜகவும் தன்பங்கிற்கு சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு செயலில் இறங்கி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க அனுமதி தர வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்தியாளர்கள் வாழ்வில் தீபஒளி ஏற்ற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல்வேறு மாநிலங்கள் விலக்கினால் தான் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என்ற சூழலில், பசுமை பட்டாசுகளை விற்க அனைத்து மாநிலங்களும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் மாநிலத்தை ஆளும் திமுகவில் இருந்தும், மத்தியில் ஆளும் பாஜகவில் இருந்தும் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய மாற்றங்கள் ஆகும்