2 விஷயங்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்.. 2 முடிவுகள்..!
முதல்வர் ஸ்டாலின் 2 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக சொல்கிறார்கள்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் ஒரு ரிப்போர்ட் பறந்ததாகவும், அதை அடிப்படையாக வைத்து 2 வித முடிவுகளை அவர் எடுக்க போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து வருகின்றன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இருந்தே, அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி கசிந்து வருகிறது.. அமைச்சர்களில் சிலர் மாற்றப்பட உள்ளதாகவும், அதனால் சீனியர்கள் பலர் அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்பட்டன.. ஒன்று, சீனியர்களுக்கு இலாகாவை குறைத்து தந்ததால் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை என்றும் கூறப்பட்டது.. மற்றொன்று சீனியர் அமைச்சர்களே சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி கொண்டதால், அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து வைத்த கோரிக்கை இதுதான்: அரசு தகவல்
மாற்றமில்லை
ஆனால், இன்றுவரை அப்படி எதுவுமே நடக்கவில்லை.. ஏனென்றால், மிகக்குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல, அமைச்சர்கள் நியமனத்தில் தான் எடுத்த முடிவு தவறானதாகிவிடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதாலும்தான், முதல்வர் அப்படி ஒரு முடிவை கையில் எடுக்கவில்லை.. வேண்டுமானால் சில அமைச்சர்கள் வைத்திருக்கும் முக்கிய இலாக்காக்களை வேண்டுமானால் மாற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டது.
உளவுத்துறை
இதனிடையே, அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு ரிப்போர்ட் கேட்டதாகவும், அந்த லிஸ்ட்டை உளவுத்துறை தயார் செய்து முதல்வருக்கு அனுப்பி வைத்தாகவும் மற்றொரு செய்தி கசிந்தது.. அதாவது 100 நாட்களில் அமைச்சர்கள் செய்த சாதனை என்ன என்பதே அந்த லிஸ்ட் ஆகும்.. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலும் அமைச்சரவையில் சில மாற்றங்கள் முதல்வர் செய்யப்போவதாக கூறப்பட்டது.. கடைசியில் அதுவும் நடக்கவில்லை.
சட்டப்பேரவை கூட்டம்
ஏனென்றால், அந்த சமயத்தில்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர், பட்ஜெட் என அடுத்தடுத்து பிஸியானது.. அதனால் அமைச்சரவை மாற்றம் வேண்டாம் என்று கருதியதால், ஐடியாவை முதல்வர் தள்ளி வைத்ததாக அப்போது சொல்லப்பட்டது.. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன், மறுபடியும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சீனியர்கள்
ஆனால், அதில் ஏற்கனவே புகாருக்குள்ளான அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்ற ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டிருந்ததாம்.. தங்கள் மீது முதல்வருக்கு அதிருப்தி வந்துள்ளது என்பதை உணர்ந்ததுமே, அந்த சீனியர்கள் படுசுறுசுறுப்பாக களமிறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அதனால், 3வது முறையும் அமைச்சரவை மாற்றம் என்ற பேச்சு பிசுபிசுத்து போய்விட்டது.
அமைச்சரவை
இப்போது 4வது முறையாக அமைச்சரவை மாற்றம் என்ற பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது.. முதல்வருக்கு உளவுத்துறை தந்த ரிப்போர்ட்டில், புதிய அமைச்சர்கள் சிலர் தெளிவாக செயல்படவில்லை, அவர்களால் சிக்கலான விஷயத்தை திறம்பட கையாள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளதாம்.. எனவே, இந்த முறையாவது அமைச்சரவையை முதல்வர் மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அப்படி ஒரு ஐடியா இந்த முறையும் முதல்வருக்கு இல்லையாம்.
2 ஐடியாக்கள்
அதேசமயம் வேறு ஒரு ஐடியாவை யோசித்து வருகிறாராம்.. அதாவது, சம்பந்தப்பட்ட துறையில் அனுபவமும், தெளிவுமில்லாத அமைச்சர்களுக்கு, நன்கு திறன்வாய்ந்த அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளாராம்.. அதேபோல அனுபவம் வாய்ந்த சீனியர் அமைச்சர்களுக்கு, கொஞ்சம் புதிய அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்கலாம் என்றும் ஸ்டாலின் நினைக்கிறாராம்... அதற்கான அறிவிப்பும் சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.
முடிவுகள்
இப்போதைக்கு திமுகவுக்கு நல்ல பெயர் இருப்பதாலும், அமைச்சர்கள் மீது பெரிதாக எந்தவிதமான புகாரும் எழவில்லை என்பதாலும், அவரவர் துறையில் அவரவர் சிறப்பாகவே செயல்பட்டு வருவதாலும்தான், இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முதல்வர் நினைக்கிறாராம்.. இப்படி செய்வதன் மூலம் திமுக அமைச்சரவை மேலும் திறன்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!