கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. மாணவர்களின் திறமைக்கு சூப்பர் கௌரவம் தர முடிவு
சென்னை: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8வது தளத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்கலாம்.
இந்த தொலைக்காட்சியில் ஆரம்ப பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல் வழங்கப்பட உள்ளது. புதிய பாடத்தின்படி பயிற்சிகள் வழங்கப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புகளுக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறலாம். மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டில் சென்று கல்வி தொலைக்காட்சியை பார்த்து பயன்பெற முடியும்.