இந்தியாவின் முதல் 'கோனா' மின்சார கார் அறிமுகம்.. முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை: இந்தியாவின் முதல் 'கோனா' மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்சாரக் கார் உற்பத்திக்காக தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில், கோனா என்ற மின்சாரக் காரின் உற்பத்தி தொடங்கியது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் கார் என்ற பெருமையுடன் தற்போது களத்தில் இறங்கியுள்ளது கோனா. இந்தக் காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
கோனா மின்சாரக் காரின் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அவர், பின்னர் காரில் பயணித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரில் பயணம் செய்தார். வரிகளுக்கு முந்தைய காரின் ஷோரூம் விலை 25 லட்சம் ரூபாய். ஆன்ரோடு விலை 30 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 39.2 கிலோ வாட் திறன் கொண்ட லித்தியம் அயன் மின்சேமிப்பான், காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்கு அருகே சார்ஜிங் பாயிண்ட் உள்ளது.
நார்மல் மற்றும் ஃபாஸ்ட் ஆகிய இரு வழிகளில் மின்னேற்றம் செய்ய முடியும். நார்மல் என்ற பயன்முறையில், முழு மின்னேற்றம் செய்ய 19 மணிநேரம் செலவாகும். ஃபாஸ்ட் பயன்முறையில் 5 முதல் 6 மணி நேரத்திற்குள்ளாக சார்ஜ் செய்து விட முடியும்.
ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலெக்டரிக் கார்... வீடியோ!
ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் தூரம் வரை கோனா கார் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோனா காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 152 கிலோ மீட்டர். 9.7 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தைத் கோனா கார் எட்டி விடும் என கூறப்படுகிறது.