தமிழகத்தில் தொழில் தொடங்கினால் மானியம் - புதிய தொழில் கொள்கை வெளியிட்ட முதல்வர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் கொள்கையை முதல்வர் வெளியிட்டார். அதிக முதலீடுகளை ஈர்க்கவும், புதிய மின்னணு நிறுவனம் தொழில் தொடங்க ஏதுவாக புதிய கொள்கை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஒரு புறம் இருந்தாலும், கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகளவு முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது.
5 மாதத்தில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 30ஆயிரத்து 664 கோடி முதலீடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய தொழில் கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும். கோவை, கடலூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் 20 % முதல் 24 % மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
தற்போது வெளியிடப்பட்ட புதிய தொழிற்கொள்கை மூலம் தமிழ்நாட்டிற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல ஆயிரம் பேருக்கு நேரடி வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.