மீண்டும் ‘தமிழணங்கு’! முதல்வர் ஸ்டாலின் Vs பாஜக அண்ணாமலை! லைக்ஸ், ஷேர் போட்டியால் திணரும் ட்விட்டர்!
சென்னை : திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை என இருவர் வேறு வேறு 'தமிழணங்கு' ஓவியங்களை பகிர்ந்துள்ள நிலையில் அது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. யார் பதிவிட்டிருக்கும் ஓவியத்துக்கு ஆதரவு அதிகளவில் உள்ளது என்ற போட்டி உருவாகியுள்ள நிலையில், இருவரின் பதிவையும் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் 8-ம் தேதி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் ஹிந்தி இருக்கட்டும் என்று கூறினார்.
இதற்கு மறுநாள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'தமிழணங்கு' என்ற தலைப்பில் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாரதிதாசனின் பாடல் வரிகளில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்' என்கிற வரியை குறிப்பிட்டு ஒரு ஓவியத்தை வெளியிட்டிருந்தார்.
வழக்காடு மொழியாக தமிழ்! தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளைகள்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழணங்கு ஓவியம்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் கொடுப்பதுபோல இது இருந்ததால் ட்விட்டர்,ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் வைரலானது. அதேசமயம், அந்த ஓவியத்தில் திரிந்த சடையும், தலைவிரி கோலமும், கயல் விழிகளுமாக வெள்ளை நிற சேலை அணிந்து, 'ழ'கர வேலை கையில் ஏந்திய நிலையில், கருப்பு நிறத்தில் காட்சியளித்தார் தமிழ்த்தாய்.
கடும் விமர்சணம்
அதே நேரத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகளால் ஓவியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த ஓவியத்தை வரைந்தது எழுத்தாளரும், ஓவியருமான சந்தோஷ் நாராயணன். 2019ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை வரைந்திருந்தார். எனவே, இதுகுறித்து கேட்டதற்கு, தமிழனின் நிறம் கருப்பு. ஆகவே, தமிழன்னையும் கருப்புதான் என்று உறுதியாக சொன்னார் சந்தோஷ் நாராயணன். எனினும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு , ஓவியர் சந்தோஷ் நாராயணனுக்கும் ஆதரவாக பேசினார்.
முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதை அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார்.
மீண்டும் பரபரப்பு
மேலும் மேலும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்துடன், 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே..' என்று பெருமையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்தார். ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் தமிழணங்கு என்ற பெயரில் தமிழ்த் தாயின் ஒவியத்தைப் பகிர்ந்தபோது, அது சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்தது மேலும் பரபரப்பை கூட்டியது.
ட்விட்டரில் போட்டி
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழணங்கே' என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த ஓவியத்தை ம.யாஷிகா என்பவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் அண்ணாமலை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரலாகத் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை என யார் பகிர்ந்த போட்டோ அதிகளவில் வைரலாகிறது என்கிற போட்டி எழுந்திருக்கிறது. இதையடுத்து இருதரப்பினரும் இருவரின் பதிவையும் பகிர்ந்து வருகின்றனர்.