நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட ஸ்டாலின் - ஓபிஎஸ்.. பரபர அரசியல் சூழலில் முதல்வர் சொன்னது என்ன?
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று மாலை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வமும் இந்த விருந்தில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
இந்த தேநீர் விருந்தின்போது, முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது பேசுபொருளாகியுள்ளது.
மேலும், ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சுமார் 25 நிமிடங்கள் தனியாகச் சந்தித்துப் பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனீர் விருந்துக்கு வராத எடப்பாடி.. யூஸ் செய்த ஓபிஎஸ்.. ஆளுநர் ரவியுடன் 25 நிமிடங்கள் சந்திப்பு
76வது சுதந்திர தினம்
இந்தியாவின் 76வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். தமிழ்நாட்டில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் தேசியக்கொடி ஏற்றினார்.
டீ பார்ட்டி
தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று ராஜ்பவனில் ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில், நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ஆளுநர் அளித்த இந்த தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசு தினத்தின்போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
தோழமைக் கட்சிகள், உயரதிகாரிகள்
நேற்று மாலை ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும், திமுக தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தலைமைச் செயலர் இறையன்பு, ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஓபிஎஸ் பங்கேற்பு
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், ஈபிஎஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் இந்த விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நேருக்கு நேர் சந்திப்பு
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஓபிஎஸ்ஸை பார்த்த முதல்வர் ஸ்டாலின் கைகூப்பி வணக்கம் தெரிவித்து, அவருக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பரபரப்பு
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் சூழலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என இருதரப்பும் முட்டி மோதி வருகின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் டீ பார்ட்டியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும், ஓபிஎஸ் - ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.