அறுசுவை சோறு போடக்கூடியவர் அமைச்சர் நேரு! எப்போதும் நான்கு கால் பாய்ச்சல் தான்! ஸ்டாலின் புகழாரம்!
அமைச்சர் நேரு நடத்தும் நிகழ்ச்சியில் அறுசுவை உணவு கட்டாயம் இருக்கும்
சென்னை: அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சியை பொறுத்தவரை அறுசுவை உணவு எப்போதும் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நேருவை பொறுத்தவரை எப்போதுமே நான்கு கால் பாய்ச்சல்தான் பாய்வார் என புகழாரம் சூடியுள்ளார்.
4 நாட்களுக்கு முன்னர் சேலத்தில் திமுக தொண்டர் ஒருவரை அமைச்சர் நேரு கோபத்துடன் தள்ளிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
தெருத் தெருவாக பிரச்சாரம் செய்ய இதுதான் காரணம்.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் எப்போது? கே.என்.நேரு பதில்
நேருவுக்கு நிகர் நேரு
''அமைச்சர் கே.என்.நேருவை நான் மனதார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்கிறபோது, நேருவுக்கு நிகர் நேரு தான் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. கட்சி நிகழ்ச்சிகளில், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் பேசியதுண்டு. அவர் எப்போதுமே நான்கு கால் பாய்ச்சல்தான் பாய்வார். ''
அறுசுவை உணவு
''அந்த அளவிற்கு வேலைகளை சுறுசுறுப்பாக முடுக்கி விடுவார். அவரிடத்தில் ஒரு குணாதிசயம் உண்டு, அன்பும் இருக்கும், கோபமும் இருக்கும். இரண்டு அஸ்திரங்களையும் அவர் ஏவி அந்தக் காரியங்களை நிறைவேற்றுவதில் ஒரு சிறப்புக்குரியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
நேரு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார் என்றால் பிரமாண்டமாக இருக்கும். ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால், அவருடைய நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும் அறுசுவை உணவு எப்போதும் இருக்கும்.''
பந்தியில் அமர்ந்து
''அந்த வகையில் அனைவரும் உணவு உண்டு, நிறைவோடு செல்லுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிமையோடு நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து, உங்களில் ஒருவனாக நானும் உங்களோடு இந்த பந்தியில் அமர்ந்து உணவருந்தி செல்ல இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, மீண்டும் அத்தனை பேருக்கும், என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.'' இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வரிடம் செல்வாக்கு
4 நாட்களுக்கு முன்னர் சேலத்தில் திமுக தொண்டர் ஒருவரை அமைச்சர் நேரு கோபத்துடன் தள்ளிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தலைமையிடம் தனது செல்வாக்கு இம்மியளவும் குறையவில்லை என்பதை நேரு உணர்த்தியுள்ளார்.