கொரோனாவால் செவிலியர் பலியாகவில்லை.. ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் மறுப்பு.. குடும்பத்தார் குழப்பம்
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியதாக வெளியான தகவலை, அந்த மருத்துவமனை டீன் ஜெயந்தி மறுத்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஜோன் மேரி பிரிசில்லா. 58 வயதானவர். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் அதிக அளவு உள்ளனர். பல மோசமான பாதிப்புகளுடன், கொரோனாவும் தாக்கிய நோயாளிகளுக்கும் இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடையச் செய்துள்ளனர்.
அந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்
தலைமை நர்ஸ்
அப்படியான ஒரு மருத்துவமனையில் தலைமை நர்சாக இருந்த ஜோன் மேரி பிரிசில்லா 24ம் தேதி முதல் திடீரென இதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடைசியில் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சிதான். இவர் கொரனாவால் இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. இத்தனைக்கும், ஜோன் மேரி, நோயாளிகளுடன் அதிகம் நேரடி தொடர்பு இல்லாதவர் என்று கூறப்படுகிறது.
பணி ஒதுக்குதல்
ஏனெனில், பிற செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவனித்து வந்தவர்தான் ஜோன் மேரி. தலைமை செவிலியர் என்பதால் பெரும்பாலும் இப்படியான நிர்வாக நடவடிக்கைகளில் பிஸியாக இருந்தார்.
பரிசோதனை
இந்த நிலையில்தான், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் கடந்த 24ம் தேதி முதல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3வது தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா சந்தேகத்தால், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.
அறிகுறி இல்லாமல் மரணம்
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜோன் மேரி திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் உயிரிழந்த முதல் தலைமை பெண் செவிலியர் இவர்தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கு காரணம், 'கேஸ் ஷீட்'. அதில் அப்படித்தான் எழுதப்பட்டிருந்தது.
சந்தேகம்
ஆனால், ஜோன் மேரி பிரிசில்லா கொரோனாவால் இறக்கவில்லை என ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி இன்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் ஜோன் மேரி பிரிசில்லா இறக்கவில்லை என கூறி அவரது உடலை, குடும்பத்தாரிடமே அளித்துவிட்டது ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம். பிரிசில்லா உடலை பெறுவதற்காக, வந்திருந்த அவரது குடும்பத்தாரோ, அவர் கொரோனாவால்தான் இறந்ததாக தெரிவிக்கிறார்கள். பிரிசில்லா தம்பி இதுபற்றி தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம், கூறுகையில், ஒரு நல்ல மனிதர், கேஸ் ஷீட்டை எங்களுக்கு அனுப்பி வைத்தார். அதில் பார்த்தால், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை ஒப்படைக்கும்போது கொரோனா பாதிப்பில் அவர் இறந்ததாக கூறி எங்களிடம் கையெழுத்து பெறவில்லை. இது பற்றி கேட்டால், கேஸ் ஷீட்டில் யாரோ தவறாக எழுதியிருப்பார்கள் என பதில் வருகிறது. இத்தனை நாட்களாக எங்களை பிரிசில்லாவை பார்க்கவும் விடவில்லை. அதனால் சந்தேகமாக இருக்கிறது என குற்றம்சாட்டினார்.
வேறு நோய்கள்
செவிலியர் பிரிசில்லாவுக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் இதய கோளாறு இருந்ததாகவும், அதனால்தான் அவர் இறந்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது குடும்பத்தார், இதில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.