'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன? மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகப் பாராட்டியுள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, 13 மாவட்டங்களில் வேக்சின் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் பின் தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி மட்டும் தற்போதைய சூழலில் கொரோனாவை ஒழிக்கும் பேராயுதமாக பார்க்கப்படுகிறது. உலகின் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளையே மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்
மெகா தடுப்பூசி முகாம்
அதிகபட்சமாகக் கடந்த செப். 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளில் 2.5 கோடி வேக்சின்கள் போடப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதைவிடக் கூடுதலாக 28.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செப். 19ஆம் தேதி நடைபெற்ற 2ஆவது முகாமில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
தமிழ்நாடு அரசு
அதைத் தொடர்ந்து கடந்த செப். 26ஆம் தேதி 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் மாநிலத்தில் நடைபெற்றது. அதில் வழக்கமான தடுப்பூசி மையங்களுடன் இணைந்து நடமாடும் தடுப்பூசி மையங்களிலும் வேக்சின் பணிகள் நடைபெற்றது. 3ஆவது தடுப்பூசி முகாமில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் மாநிலத்திலுள்ள அனைவருக்கும் வேக்சின் போட்டு முடிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
தலைமை செயலாளர் கடிதம்
இந்தச் சூழலில் மாநிலத்தில் நடைபெற்று வரும் வேக்சின் பணிகள் குறித்து மாநிலத் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் சிறப்பாகச் செயல்பட்டதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வேக்சின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகப் பாராட்டியுள்ளார்.
13 மாவட்டங்கள் தொய்வு
மேலும், விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அரியலூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாகக் கூறியுள்ளார். பின் தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நடவடிக்கை தேவை
தொடர்ச்சியான கடுமையான முயற்சிக்குப் பின்னரும் கூட வேக்சின் பணிகளில் பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் நாம் 13ஆவது இடத்தில் தான் உள்ளோம் என்று தெரிவித்துள்ள இறையன்பு, தடுப்பூசி உற்பத்தி குறித்த சிக்கல்கள் இருப்பது ஒரு காரணம் என்றும் இருப்பினும் அதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதில் உள்ள சிக்கல்கள் குறித்து தனது கவனத்திற்கு எடுத்து வரலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.