ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாகின்றனர் - நீதிபதிகள் வேதனை
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக ஹைகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெற்றோர் உறங்க சென்ற பிறகு ஆன்லைனில் விளையாட தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் வினோத் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளில் இன்று மத்திய தகவல் தொலைதொடர்பு துறை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், பெற்றோர் உறங்க சென்ற பிறகு ஆன்லைனில் விளையாட தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாவதாகவும் குறிப்பிட்டனர்.
மனுதாரர் சூரியபிரகாசம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
எதைப் பற்றியும் சட்டை செய்யாத சீனா.. லடாக் எல்லையில் ஃபைபர் கேபிள் அமைக்கிறது.. வெளியான திடுக் தகவல்
இருவரையும் வழக்கில் சேர்க்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், வழக்குக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.