இதுதாண்டா செல்பி.. அழுக்கு சட்டை.. இதழ் நிறைய அழகு சிரிப்பு.. கையிலோ செருப்பு
செருப்பை வைத்து செல்பி எடுத்த சிறுவர்களின் புகைப்படம் வைரலாகிறது.
சென்னை: செருப்பை செல்போன் போலபிடித்து கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று அனைவரையும் ஈர்த்துள்ளதுடன், இதயத்தையும் கனக்க செய்து வருகிறது.
இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலானோரிடம் செல்போன் வந்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத இளசுகளும் ரொம்ப குறைவுதான். புது புது டிசைன், புது புது போஸ், புது புது ஐடியாக்களில் சாப்பிடுவதை, நிற்பதை, நடப்பதை, பேசுவதை, சிரிப்பதை, முறைப்பதை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் செல்ஃபிக்களாக எடுத்து தள்ளுகிறார்கள்.
செல்ஃபி என்றால் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று அதற்கு ஒரு ரூல்ஸ் போட்டு கொண்டு, போட்டோக்களை எடுத்து, அதை எடுத்த கையோடு போஸ்ட் பண்ணிவிட்டுதான் சிலர் மறுவேலையே பார்க்கிறார்கள்.
செல்போன்
இந்நிலையில் 2 நாளாக ஒரு போட்டோ இணையத்தை கலங்கடித்து வருகிறது. இதுவும் செல்ஃபிதான். ஆனால் செல்போன் இல்லாத செல்ஃபி!
அழுக்கு சட்டைகள்
5 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து செருப்பை செல்போனாக பிடித்து கொண்டு செல்ஃபி எடுத்துள்ளனர். இவர்கள் 5 பேரும் ஒரு கிராமத்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எல்லாருமே அழுக்கான சட்டையை போட்டிருக்கிறார்கள். தலையை ஒருத்தரும் சீவவில்லை. காலில் செருப்பு இல்லை.
கள்ளங்கபடமற்ற சிரிப்பு
ஒருத்தனுக்கு மட்டும் ஒரே ஒரு செருப்பு காலில் இருக்கிறது. அது என்ன ஒரே ஒரு செருப்பு என்று பார்த்தால், இன்னொரு செருப்பில்தான் செல்ஃபி எடுத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார், என்ன என்ற விவரம் தெரியவில்லை. செல்பி எடுக்கும்போது செல்போனை பார்த்து எப்படி எல்லாரும் சிரிப்பார்களோ அதேபோல இருக்கிறது இவர்களின் சிரிப்பும்.
வெகுளித்தனம்
ஆனால் அந்த சிரிப்புடன் மழலையும் கள்ளங்கபடமற்ற வெகுளித்தனமும் சேர்ந்து தெறிக்கிறது. செல்போன் இல்லை என்ற ஏக்கம், ஆசையின் வெளிப்பாடா இது? அல்லது எங்கள் மகிழ்ச்சியை செருப்பிலும்காண முடியும் என்று குழந்தைகள் சொல்ல வருகிறார்களா? தெரியவில்லை. ஆனால் நமக்கு மனசு மட்டும் கனத்து விடுகிறது!!