இன்று இல்லை...நாளையும் உலக மருத்துவ சந்தை சீனாவின் கையில்தான்...!!
சென்னை: கொரோனா வைரஸ் உலகை விட்டு மறைந்து, அடுத்த சுகாதார சிக்கல்கள் எழும்பட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் சீனாதான் இன்றும் போல் அன்றும் முன்னணியில் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் உருவான நாவல் கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதையும் ஆட்கொண்டு மக்களை மரண பீதியில் வைத்துக் கொண்டுள்ளது. மூக்கு, வாய், கண் வழியாக நுரையீரலை கொரோனா வைரஸ் தாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்த பின்னர் மாஸ்க்கின் தேவை நாடு முழுவதும் அதிகரித்தது.
மாஸ்க் மட்டுமின்றி மருத்துவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்புக் கவசங்கள், வென்டிலேட்டர்கள், டெஸ்ட் கிட்ஸ் என்று அனைத்துக்குமான தேவைகள் அதிகரித்தது. மக்களுக்கு மாஸ்க் அணிவது புதிதாக இருந்தாலும், இது கட்டாயமானது. இதன் தேவையும் அதிகரிக்க சீனா இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. சீனா முதலில் கொரோனா வைரஸை எதிர்கொண்ட நாடு என்பதால், முன்னரே இதுபோன்ற மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது.
அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் மருத்துவ சாதனங்கள் இல்லாமல் துவக்கத்தில் திணறி வந்தன. தற்போது அந்தந்த நாடுகள் தங்களது தேவைகளை சிறிதளவே பூர்த்தி செய்து கொண்டாலும், சீனா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை அதிகளவில் தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
தன்னுடைய நாட்டில் புதிதாக கடன்கள் வழங்கி பெரிய அளவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க ஆதரவு கொடுத்தது. உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்துதான் மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை விடுத்தது. கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடித்து விட்டால் இந்த நிறுவனங்களின் தேவை குறைந்துவிடும்.
ஆனாலும், தற்போது உலகம் எதிர்கொண்ட மருத்துவ உபகரணங்களின் அவசர தேவையை எப்படி எதிர்கொள்வது என்று சீனா பாடம் கற்றுக் கொண்டது. சீன நிறுவனங்களுக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகம் அடுத்த முறை சுகாதாரம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் போது சீனா எளிதில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிலையில் இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே சீனா சர்ஜிகல் மாஸ்க், சுவாசக் கருவிகள், மருத்துவ கண் கண்ணாடி ஆகியவற்றை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சிறப்பு துணியை மாஸ்க் தயாரிக்க சீன நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த பிப்ரவரியில் மட்டும் 12 மடங்கு அளவிற்கு மாஸ்க் தயாரித்து இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 150 டன் மாஸ்க்குகளை சீனா தயாரிக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா தாக்குதலுக்கு முன்னர் தயாரித்து வந்த மாஸ்க் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது ஐந்து மடங்கு அதிகமாகும். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது 15 மடங்கு அதிகமாகும்.
எதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நிரந்தரமாக மாஸ்க் தயாரிப்பது தேவையில்லாதது என்று கருதுகின்றனர். ஆனால் அது தவறு என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறைக்கான சீன துணை அமைச்சர் மா சாவ்சு அளித்திருக்கும் பேட்டியில், ''கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை சீனா 70.6 பில்லியன் மாஸ்க்குகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு, உலக அளவில் 20 பில்லியன் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாதியளவு சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2015ல் சீனாவில் சார்ஸ் தொற்று ஏற்பட்டபோது, 350 பேர் உயிரிழந்து இருந்தனர். அப்போது சுவாசக் கருவிகள் அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்று சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 2010ஆம் ஆண்டின் சீன பட்ஜெட்டில் மருத்துவ உபகரணங்கள், அடிப்படை மருத்துவக் கருவிகளை தயாரிக்க அதிக நிதி ஒதுக்கி இருந்தது. பெரும்பாலும், வெளிநாடுகளில் இருந்து சிலவற்றை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்று சீனா முடிவு எடுத்தது. கொரோனா வைரஸை கண்டறியும் ஆசிட் டெஸ்ட் கிட் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை 2017, சார்ஸ் தொற்றுக்குப் பின்னர் சீனா நன்றாக அறிந்து இருந்தது. இதனால், துவக்கத்தில் தடுமாறினாலும், உள்நாட்டில் கொரோனாவை எளிதில் சீனா கட்டுப்படுத்தியது.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சீனா அறிந்து வைத்துள்ளது. ஆனால், இன்னும் பல வளர்ந்த நாடுகள் இதை உணர்ந்ததாக தெரியவில்லை. எதிர்காலத்தில் எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதை சீனா எளிதில் எதிர்கொள்ளும், உலக சந்தையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.