"நல்லா" சொன்னீங்க அத்வாலே சார்.. ஆமா.. இப்படியெல்லாம் பேச சொல்லி யாரு சொல்லி கொடுத்தா!
பிரைட்ரைஸ், மேகிக்கு தடை விதிப்போம் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்
சென்னை: அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்களே.. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பார்களே.. அதுபோல ஒரு கருத்தை உதிர்த்துள்ளார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.. சைனீஸ் புட் எதையும் சாப்பிடாதீர்கள் என்று சொல்லி, நம்ம அமைச்சர் செல்லூர் ராஜுக்கே செம டஃப் தந்துள்ளார்!
4 நாட்களாக சீன விவகாரம் பற்றி கொண்டு எரிகிறது.. கொடூரமாக நம் வீரர்களை எல்லையில் கொன்றதால், சீனா மீது செம கடுப்பில் உள்ளனர் இந்திய மக்கள்... அதனால் சீனாவுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து சீனாவை அடக்குவது என்பதில் பெரும் குழப்பம்தான் நிலவுகிறது.
சீன பொருட்களை புறக்கணிப்பது என்றும் ஆவேசமாக ஒரு முடிவை எடுத்துள்ளனர்.. அதனால் கூகுளுக்கு சென்று எதுவெல்லாம் சீன பொருட்கள் "புறக்கணிப்பு" என்று தேடி கண்டுபிடித்து வருகிறார்கள். ஆனால் நம் வீடுகளில் முக்கால்வாசி பொருட்கள் மேட் இன் சைனாதான் உள்ளது வேறு விஷயம். இதுதான் பெரும் குழப்பமே.
சீனா மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு சல்யூட் அடித்து பிரியாவிடை தந்த பிஞ்சு மகன்
ஹோட்டல்கள்
இந்த புறக்கணிப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு கருத்து சொல்லி உள்ளார்.. அதாவது இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முக்கிய அம்சத்தை தெரிவித்துள்ளார். ஹோட்டல்களில் சைனீஸ் உணவு வகைகளான பிரைடு ரைஸ், நூடுல்ஸ், உள்ளிட்டவைகளை விற்க தடை விதிக்க வேண்டும், பொதுமக்களும் சைனீஸ் உணவு வகைகளை புறக்கணிக்க முன் வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலையிழப்பு
இங்கே நாம பிரைடு ரைஸ் சாப்பிடாமல் விட்டால் அது எப்படி சீனாவுக்கு பதிலடி தருவதாக இருக்கும் என தெரியவில்லை.. நாம பிரைடு ரைஸ் சமைப்பது இந்தியாவில்.. ஹோட்டல் வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்.. வேலை செய்து வருபவர்களும் இந்தியர்கள்தான்.. இந்தியர்கள் முதலீடு செய்து இந்தியர்களே நடத்தி முழுக்க முழுக்க இந்தியர்களே பலனடையும் சைனீஸ் ரெஸ்ட்டாரெண்டுகளை இழுத்து மூடிவிட்டால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள்தானே வேலையிழக்க நேரிடும்?
ஃபிரைட் ரைஸ்
இதை நாட்டு மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியைவிட ஆச்சரியத்தையே தருகிறது. அதுமட்டுமில்லை, நாம ஒன்றும் சைனாவில் இருந்து ஃபிரைட் ரைஸ் வாங்கி வந்து சாப்பிடவில்லை. மூலப்பொருட்கள் இந்தியாவிலேயே விளைந்து இங்கேயே தயார் செய்து இங்கேயே சமைக்கப்படுவது.. டிஷ் பெயர் மட்டும்தான் சைனீஸ் பெயர்!
கவுண்டமணி
கவுண்டமணி ஒரு படத்தில கேட்பாரே, "இப்படியெல்லாம் பேச சொல்லி உனக்கு யாரு சொல்லி கொடுத்தா" என்று.. அப்படித்தான் மத்திய அமைச்சரையும் பார்த்துக் கேட்க வேண்டியுள்ளது. பொதுவாக நம்ம ஊர் செல்லூர் ராஜுதான் இப்படி எல்லாம் பேசி மக்களுக்கு ஒரு ஜெர்க் தருவார்.. ஆனால் செல்லூர் ராஜு வேண்டுமென்றே அப்படி பேசுவதில்லை.. தான் பேசுவது எல்லாமே விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்து பேசுவதாக நினைத்து கொண்டு மிக சீரியஸாக பேசுவார்.. ரொம்பவும் வெகுளியும் கூட.. ''நான் எம்ஜிஆர் மாதிரி, அவர் எப்படி அநியாயத்தைத் தட்டிக் கேட்பாரோ அதேபோல், எங்கள் ஆட்சியில் யாராவது முறைகேடு செய்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்" என்று தடாலடி பேட்டி தந்து திணறடித்துவிடுவார்.
செல்லூர் ராஜு
"முதலமைச்சரே எங்களை முதலில் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளீரா என்று கேட்டார்.. நாங்க எல்லாரும் டெஸ்ட் எடுத்துட்டோம்.. எங்களுக்கு நெகட்டிவ் தான்" என்று வெளிப்படையாக பேசுபவர்.. தன்னை கிண்டல் பண்ணினாலும் அதை பெரிதுபடுத்தாத நல்ல மனசுக்காரர், வெள்ளந்தி மனுஷன். ஆனாலும் இவர் எது பேசினாலும் அது சர்ச்சையாகவோ, அல்லது வைரலாகவோ போய்விடும்.. அப்படிப்பட்ட செல்லூர் ராஜுவுக்கே டஃப் தந்துள்ளார் மத்திய அமைச்சர்!
Recommended Video
தவிர்க்கலாம்
இந்த விஷயத்தை சீரியஸாக அணுகுவதாக இருந்தால், சீன பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க முடியுமா என்று அமைச்சர் பார்க்க வேண்டும்.. அதேபோல எலக்ட்ரானிக் பொருட்களின் விளம்பரங்களை தடுத்து நிறுத்த முடியுமா என்றும் யோசிக்கலாம்.. ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தால், சீன பொருட்களை தவிர்க்கலாம், உள் நாட்டு உற்பத்தி பொருட்களையும் நம் மக்கள் வாங்க வழியுண்டு.. இதை மத்திய அரசும் சிந்தித்தால் நல்லா இருக்கும்.. அதுவரைக்கும் அத்வாலே சற்றே பொறுமை காத்தால் ரொம்ப நல்லது!