"அன்னிக்கு மன்னிப்பு கடிதம் எழுதுனீங்களே.. ஏன் மெளனமா இருக்கீங்க சிதம்பரம்" எச்.ராஜா கிடுக்கிப்பிடி
காங். மூத்த தலைவர் ப. சிதம்பரத்துக்கு எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "அன்னைக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினாரே சிதம்பரம், இப்போ வரைக்கும் ஏன் மௌனமாக இருக்கார்?" என்று சீன விவகாரம் குறித்து எச்.ராஜா சுளீரென கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 4 நாட்களாக நாட்டில் பதற்றம் உள்ளது.. லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலால், நம் நாட்டு வீரர்கள் மிக கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது... தங்கள் வீரர்களும் இறந்துவிட்டனர் என்று சீனா சொல்லி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை.
இருந்தாலும் இந்த பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது... இது சம்பந்தமான அரசியல் விவகாரங்கள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், இந்திய மக்கள் கொதிப்பில் உள்ளனர். சீன பொருட்களை வாங்க கூடாது என்று முடிவெடுத்து வருகின்றனர். இது சம்பந்தமான பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார்.
அதில், "சீன பொருட்களை நாம் இனிமேல் பயன்படுத்தக்கூடாது" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. ஆனால், அதற்கு ட்விட்டர்வாசிகள், "சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே? அதை இந்தியாவில் செய்து இருக்க முடியாதா? சீனாவில் இருந்து வந்த சர்தார் வல்லபாய் சிலை சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுமா? நம் பணம் நமக்கு திரும்ப கிடைக்குமா" என்று எச்.ராஜாவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?" என்று கேட்டிருந்தார்.
ப.சிதம்பரம் என்றவுடன் முதலில் வந்து பதில் சொல்லும் எச்.ராஜா இதற்கும் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. "சீன ராணுவம் நமது முப்படைகளை எதிர் கொண்டால் போதும். ஆனால் இந்தியாவோ சீனாவின் முப்படைகளையும், இந்தியாவில் உள்ள சீனாவின் ஐந்தாம் படையையும் சேர்த்து 4 படைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது நம் நாட்டின் துரதிருஷ்டம்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்வீட்டில், "2008 வரை கட்டாமல் இருந்த மிகவும் உயரமான தவ்லக் பெக் ஒல்டி விமான தளத்தை கட்டிய விமானப்படை தளபதி பிரணாப் மீது நடவடிக்கை எடுத்து அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று சீனாவிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய அன்றைய நிதி அமைச்சர் பற்றி இன்று வரை ஏன் மௌனம்?" என்று கேட்டுள்ளார்.
பிரதமர் மோடி சீன அதிபரோடு 18 முறை சந்திப்பு... 5 முறை சீனா பயணம்... ஆனாலும் என்ன பயன்? -உதயநிதி
ப.சிதம்பரம் ஒரு மவுனத்தை பற்றி கேள்வி கேட்டால், எச்.ராஜா இன்னொரு மவுனத்தை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.. ஆக மொத்தம், எச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் ஏகப்பட்டோர் திரண்டு வந்து ஆதரவும், எதிர்ப்புமாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.