ஜி ஜின்பிங் பயணிக்க ஏற்பாடு.. சீனாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது அதி நவீன Hongqi கார்கள்
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை மாமல்லபுரம் வருகை தரும் நிலையில் அவர் பயன்படுத்தப் போகும் நான்கு சொகுசு கார்கள் சரக்கு விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
11ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கியிருந்து இருநாட்டு உறவு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. நகரம் முழுக்க காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
இந்த நிலையில் B747 சரக்கு விமானம் மூலமாக சீனாவிலிருந்து இன்று நேற்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு நான்கு கார்கள் வந்து இறங்கின.
இது தொடர்பாக விசாரித்த போது, இந்த கார்கள் சீன அதிபரின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது என்று தெரிகிறது. நாளைமறுநாள் மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு மிகுந்த காரில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்.
'Hongqi' என்ற சீன தயாரிப்பு ஆடம்பர காரை சீன அதிபர் பயன்படுத்தி வருகிறார். இந்த கார் வெறும் 8 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை தொடக் கூடியது. 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட இந்த காரின் எடை 3152 கிலோ.