சீனா அதிபர் ஸி ஜின்பிங் நாளை தமிழகம் வருகை- பிரதமர் மோடியுடன் 2 நாட்கள் பேச்சுவார்த்தை!
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஸி ஜின்பிங் நாளை தமிழகம் வருகை தருகிறார். சென்னையை அடுத்த புராதான நகரமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் 2 நாட்கள் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் 12. 30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவளத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு தாஷ் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் மோடி தங்குகிறார்.
அவரைத் தொடர்ந்து சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து தனிவிமானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் ஜின்பிங் சென்னை வருகிறார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
அத்துடன் ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. விமான நிலையம் முதல் அவர் தங்க இருக்கும் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் வரை இதேபோன்ற வரவேற்பு அளிக்கப்படும்.
கிண்டி டூ மாமல்லபுரம்
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார் ஜின்பிங். கிண்டி முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 34 இடங்களில் கலைநிகழ்வுகளுடனான வரவேற்புகள் ஜின்பிங்குக்கு கொடுக்கப்படும். மாமல்லபுரத்தில் மாலை 4.55 மணிக்கு சுற்றுலா இடமான அர்ச்சுனன் தபசுவுக்கு சென்று அடையும் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் ஐந்துரதம், கடற்கரை கோவிலை பார்வையிடுகின்றனர். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடனான இரவு உணவுக்குப் பின்னர் கிண்டி ஹோட்டலுக்கு ஜின்பிங் திரும்புகிறார். பிரதமர் மோடி கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் தங்குகிறார்.
கிண்டு டூ கோவளம்
நாளை மறுநாள் காலை 9.05 மணிக்கு கிண்டியில் இருந்து ஜின்பிங் புறப்படுகிறார். பிரதமர் மோடி தங்கியிருக்கும் கோவளம் ஹோட்டலுக்கு சென்று காலை உணவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர்.
சென்னை டூ காத்மண்டு
அதே கோவளம் ஹோட்டலில் இருநாட்டு உயர்நிலை குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 12.45 மணிக்கு கோவளத்தில் இருந்து ஜின்பிங் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. தனி விமானம் மூலம் பகல் 1.35 மணிக்கு சென்னையில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டு செல்கிறார் ஜின்பிங். பிரதமர் மோடி பிற்பகல் 2 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அதிநவீன கார்கள்
பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னை முதல் மாமல்லபுரம் வரை 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜின்பிங்குடன் 200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தமிழகம் வருகை தருகிறது. ஜின்பிங் வருகையை முன்னிட்டு நேற்றே சீனாவில் இருந்து அதிநவீன 4 கார்கள் சென்னை வந்துவிட்டன. மாமல்லபுரத்தில் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சாலை ஓர கடைகள் அனைத்தும் அப்புறப்பட்டு புதிய சுற்றுலா நகரமாக உருமாற்றப்பட்டிருக்கிறது.
மீன்பிடிக்க தடை
பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்பில் 2 போர்க்கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
திபெத்தியர்கள் கண்காணிப்பு
சீனா அதிபர் ஜின்பிங் செல்லும் இடங்களில் திபெத்தியர்கள் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை முதல் மாமல்லபுரம் வரை திபெத்தியர்கள் எந்த ஒரு இடத்திலும் போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காகவும் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் சென்னை அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை, பழைய மகாபலிபுரம் சாலையான ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.