சீன அதிபரை வியக்க வைத்த பத்மினி.. சுற்றி சுழன்றாடிய கால்கள்.. விழி விரிய வைத்த நாட்டிய தாரகை!
பத்மினியின் நடனத்தை அன்றைய சீன அதிபர் கண்டு வியந்தார்
சென்னை: அன்றைய சீன அதிபருக்காக நடிகை பத்மினி நடன உடையில் காத்து கொண்டிருந்தார்.. அவரது நடனத்தை பெருமை பொங்க அதிபர் ரசித்து வியந்தார்.. என்ற பழைய செய்திகள் நம்மை இன்றும் பூரிப்படைய செய்கிறது.
சீன அதிபர் ஸீ ஜின்பிங், மகாபலிபுரம், சென்னை வருகை நிகழ்ந்து வருகிறது. இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம் உள்ளது. மகாபலிபுரம் தகதகவென மின்னி கொண்டிருக்கிறது. சென்னை பரபரத்து காணப்படுகிறது.
ஆனால் இதேபோன்று ஒரு சம்பவம் 1956-ம் ஆண்டும் நடந்துள்ளது. அன்றைய சீன அதிபர் பெயர் சூ என் லாய். பள்ளிக்கூட பாடத்தில் நாம் படித்தது இந்த பெயரை.
பாகுபாடு இல்லை
இவர் 1956-ல் சென்னைக்கு வந்தபோது, அவரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்று இருக்கிறார்கள். அன்றைய காலம் நம் மக்களுக்கு எந்தவித அரசியல் பாகுபாடும் தெரிய காணோம். வெளிநாட்டுக்காரர் நம்ம ஊரை சுற்றி பார்க்க வருவதே பெருமையாக நம் பெரியவர்கள் அன்று நினைத்தார்கள். அதனால்தான் திரண்டு மனசார வரவேற்பு தந்தனர்.
ஜெமினி ஸ்டுடியோ
நிறைய இடங்களை அவர் சென்னையில் சுற்றி பார்த்தார். அப்போது சினிமா ஸ்டுடியோக்களிலேயே மிகப்பெரியது ஜெனிமி ஸ்டுடியோதான். அதனால் அந்த இடத்துக்கு அதிபரை நம் தமிழக தலைவர்கள் அழைத்து சென்று காண்பித்தார்கள்.
ஷூட்டிங்
எஸ்.எஸ்.வாசன், கொத்தமங்கலம் சுப்பு, உள்ளிட்டவர்கள் சூ என் லாய்க்கு ரோஜாப்பூ மாலை போட்டு வரவேற்று, ஸ்டுடியோவை சுற்றி காண்பித்தனர். அப்போது ஒரு பட ஷூட்டிங் உள்ளே நடந்து கொண்டிருந்தது. மொழி தெரியாவிட்டாலும், அதை நின்று சூ என் லாய் பார்த்து ரசித்து நின்றார்.
அறிமுகம்
இவர் வருகிறார் என்பதற்காக நாட்டிய பேரொளி பத்மினியின் நடனத்திற்கு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. அதிபரின் வருகைக்காக முன்னமேயே நடன உடையில் பத்மினி காத்து கொண்டிருந்தார். பிறகு நிகழ்ச்சிக்கு வந்ததும், பத்மினியை அதிபருக்கு அறிமுகம் செய்து வைக்க.. பத்மினிக்கு கைகுலுக்கி வாழ்த்து சொன்னார் அதிபர். இதன்பிறகுதான் அந்த டான்ஸ் நிகழ்ச்சி நடந்தது.
கடின உழைப்பு
ஒரு இந்தி படத்திற்கான நாட்டிய காட்சி சூ என் லாய் முன்னிலையில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில்தான் பத்மினி டான்ஸ் ஆடினார். நம் பாரம்பரிய நாட்டியத்தை வெகுவாக ரசித்து பார்த்து மகிழ்ந்தார் அதிபர். "ஸ்டுடியோ ரொம்ப நன்றாக இருக்கிறது, கடினமான வேலை" என்று தன் கருத்தையும் அதிபர் செய்தியாளர்களிடம் அன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.