'டத்தோ' பட்டம் பொய்.. ராதாரவியை மீண்டும் வம்பிக்கிழுக்கும் சின்மயி
ராதாவியின் டத்தோ பட்டம் போலியானது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
சென்னை: சின்மயி இப்போது திரும்பவும் ஆரம்பிச்சிட்டார். நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் 'டத்தோ' பட்டமே பொய் என்று சொல்லி அவரை வம்புக்கு இழுக்க ஆரம்பித்துள்ளார்.
வைரமுத்து மீது மீ டூ வில் பாலியல் புகாரை கொளுத்தி போட்ட சின்மயி, இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆதாரம் கேட்டதற்கு தேடி கொண்டிருக்கிறேன், வந்ததும் தருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.
ஆனால் இன்னும் ஆதாரம் தரவில்லை. ஆனால் சின்மயியின் துணிச்சலுக்கும், எத்தனை விமர்சனம் வந்தாலும் அதை எதிர்த்து பதில் சொல்லும் மனோதிடத்திற்கும் இவருக்கு ஒரு சாராரிடையே ஆதரவும் இருந்து வருகிறது.
கட்டணம் செலுத்தவில்லை
இந்நிலையில், டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இந்த சங்கத்தின் தலைவர் ராதாரவி ஆவார். இது சின்மயிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணமாக சங்கத்துக்கு சந்தா தொகையை சின்மயி ஒழுங்காக செலுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கும் பதில் அளித்த சின்மயி, "நான் வாழ்நாள் கட்டணத்தை சங்கத்துக்கு செலுத்தி விட்டேன்" என்றார்.
டத்தோ பட்டம் பொய்
இந்த நிலையில், இப்போது ராதாரவி மீது சின்மயி ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ராதாராவிக்கு டத்தோ என்ற பட்டம் உள்ளது. இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம் ஆகும். தன் பெயருக்கு முன்னால் எப்போதுமே இந்த டத்தோ பட்டத்தை சேர்த்துதான் ராதாரவி பயன்படுத்துவார். ஆனால் இந்த டத்தோ பட்டமே பொய்யானது என்று சின்மயி கூறியுள்ளார்.
ஆவணத்தில் இல்லை
இது தொடர்பாக சின்மயி மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ராதாரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை.
பரபரப்பு
இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டு உள்ளது என்று அரசு செயலர் குறிப்பிட்டு உள்ளார். இப்படி ராதாரவியின் பட்டம் போலியானது என்பதை ஆதாரத்துடன் சின்மயி நிரூபித்துள்ளதால் சினிமா உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.