புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?- ஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்!.. கையெடுத்து கும்பிட்ட சின்மயி
சென்னை: மீ டூ விவகாரத்தில் எங்களை புரிந்து கொண்டு ஆண்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார் பாடகி சின்மயி.
பெண்கள் தங்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகளை மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். இதில் சில பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் கூறப்படுகின்றன. இதற்கு அவர்கள் மறுப்பதும் ஆதாரம் அளிப்பதும் என்பதுமாகவே இருக்கிறது. இதுபோல் சின்மயியும் கவிஞர் வைரமுத்து மீது ஒரு புகாரை அளித்துள்ளார்.
அதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்விட்சர்லாந்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்கு சென்ற போது வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சின்மயியின் புகாராகும். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரத்துடன் வழக்கு தொடருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
கிண்டல்
இந்நிலையில் சின்மயியை கிண்டல் செய்து சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவலாக பேசப்படுகின்றன. அதில் 15 ஆண்டுகள் வரை வைரமுத்து குறித்து வெளியில் கூறாமல் தற்போது கூறவேண்டியதன் அவசியம் ஏன், இந்த தீபாவளிக்கு சின்மயி வெடி வந்துள்ளதாம், அதை இப்போது கொளுத்தினால் 15 ஆண்டுகள் கழித்து வெடிக்குமாம் என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பணிகள்
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, சின்மயி, லீனா மணிமேகலை உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சின்மயி கூறுகையில் யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. மும்பை, ஆந்திரம், தெலுங்கானாவில் உள்ள சினிமா துறை பெண்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல்
உடனடியாக புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை கொடுத்துள்ளனர். இவ்வளவு நாட்களுக்கு பிறகு இத்தனை பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். போகிற போக்கில் எல்லோரையும் அசிங்கப்படுத்த நாங்கள் இங்கே வரவில்லை. எங்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது.
கார்ப்பரேட்
ஆண்டாள் சர்ச்சையில் என்னை வைத்து அரசியல் செய்யாதீர். ஒரு பாஜக அமைச்சர் மீதே பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதில் இடது, வலது, மையம் என எல்லா அரசியல் கட்சி ஆண்களும் சிக்கியுள்ளனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர், இல்லாதவர், பத்திரிகையாளர், அமைச்சர், கார்ப்பரேட் என அனைத்து தரப்பினரின் பெயரும் இதில் அடிபட்டுள்ளது. எங்களுக்கு ஆதரவாக மீ டூ இயக்கம் வந்துள்ளது. இனி கேள்வி மேல் கேள்வி கேட்போம்.
தேடுகிறேன்
ஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள். நான் சுவிட்சர்லாந்துக்கு எப்போது சென்றேன், எந்த தேதி ஆகியவை அடங்கிய பாஸ்போர்டை தேடி வருகிறேன். இந்த 15 ஆண்டுகளில் 10 வீடுகள் மாறியாகிவிட்டது. எனவே ஆதாரத்தை தேடி கொண்டிருக்கிறேன். அது கிடைத்தவுடன் நிச்சயம் வழக்குத் தொடுப்பேன் என்றார்.