நல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு
சின்னதம்பியை காட்டுக்குள் அனுப்பும் சூழல் இல்லை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: திரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி "நல்ல தம்பி" ஆகிவிட்டதாலும் இனி யானை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி வந்துவிட்டது.
எனவே சின்னத்தம்பியின் அட்டகாசம் நாளை பெருகிவிட்டால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது. இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியது.
கோரிக்கை
இதனால் சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தார். மேலும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அருண் பிரசாத் முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தார்.
நல்ல தம்பி
இதன் மீதான விசாரணையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்னத்தம்பி யாரையுமே துன்புறுத்தவில்லை என்பதால், அதனை பாதுகாப்பாக காட்டுக்கு அனுப்புவதே எங்கள் முடிவு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
வேறு வழி இல்லை
இந்நிலையில், இது சம்பந்தமான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை சார்பில் தெரிவிக்கும்போது, "சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. காட்டுக்குள் அனுப்புவதற்கான சூழலும் இல்லை.
நாளை விசாரணை
மேலும் யானை நிபுணர் தேசாஜி, சின்னதம்பி சாதுவாகி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே சின்னதம்பி நல்ல தம்பி ஆகிவிட்டதால் யானை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமான வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.