ராத்திரி கூட போனில் பேசினார்.. நம்புனேனே.. கணவர்தான் அடித்தே கொன்றுவிட்டார்.. சித்ரா தாய் குமுறல்
சென்னை: சித்ராவை அவரது கணவர் அடித்துக் கொலை செய்துள்ளதாக தாயார் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை, நசரத்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை, நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. கணவர் ஹேமந்த் ரூமுக்கு வெளியே போனதாகவும், அப்போது சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சித்ரா கன்னத்தில் காயம் இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
ராத்திரி ரூமில் என்ன நடந்தது.. சித்ரா கழுத்தில் காயமே இல்லை.. ஒரே மர்மம்.. வெளிவரும் பரபர தகவல்கள்
பிரேத பரிசோதனை
இந்த நிலையில்தான், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், இன்று சித்ராவின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அங்கு சித்ரா தாய் விஜயா மற்றும் உறவினர் வருகை தந்திருந்தனர். சின்னத் திரை பிரபலங்களும் வருகை தந்திருந்தனர். அப்போது விஜயா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.
திடீர் திருமணம்
எனது மகள் நல்லவரா, கெட்டவரா என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில் எல்லா சேனலிலும் வேலை பார்த்தவர் அவர். ஹேமந்த் என்பவரோடு திடீரென ரிஜிஸ்டர் கல்யாணம் முடிந்தது. எங்கள் வீட்டிலிருந்து 3 பேர், அவுங்க வீட்டிலிருந்து 3 பேர் வந்தனர்.
போனில் சொன்னார்கள்
திங்கள்கிழமை போய் சத்திரம் பார்த்தோம். நல்லாதான் பேசினார், நல்லதான் செய்தார். ஆனால், எனது மகளை ஏதோ செய்துவிட்டார். நேற்று காலையில் 5.15 மணிக்கு சித்ரா மாமனார் போன் செய்து சித்ரா மோசம் செய்துவிட்டது என்று சொன்னார். எனக்கு திடுக்கென்று ஆகிவிட்டது.
அடித்துக் கொலை
சித்ரா தற்கொலை செய்பவர் இல்லை. யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் தைரியமாக இருக்கனும் என்று சொல்பவர். அடித்து சாகடித்துள்ளார் சித்ரா கணவர். சித்ரா எங்கே போனாலும் நானும் கூடவே போவேன். கல்யாணம் ஆனதும், ஹேமந்த் பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்று நான் தைரியமாக இருந்தேன். ஆனால் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.
போனில் பேசினார்
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு எனக்கு சித்ரா போனில் பேசினார். ஆனால் விடியற்காலை தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள். புருஷனும், மனைவியும் நல்லாத்தான் இருந்தார்கள், என்ன பிரச்சினை இருந்ததோ தெரியவில்லை. நான் ஏமாந்துவிட்டேன். ஹேமந்த்தை கைது செய்ய வேண்டும். விடவே கூடாது. இவ்வாறு சித்ரா தாய் தெரிவித்தார்.