சித்ரா தற்கொலை வழக்கு - சிபிசிஐடி விசாரணை கேட்கும் தாயார் - முதல்வர் தனிப்பிரிவில் மனு
மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை: டிவி சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று அவரது தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார் விஜயா.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர்.
இதற்கிடையே பதிவு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார். சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 16 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இதனிடையே மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று சித்ராவின் தாயார் விஜயா, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார் விஜயா.
சித்ரா குளித்தபோது.. ஹேமந்த் ஏன் வெளி வந்தார்.. யார் அந்த
சித்ரா தற்கொலையில் வழக்கில் சந்தேகம் இருப்பதாக, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்டிஒ விசாரணை நடைபெறும் நிலையில், தனது மகன் கைது செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், சித்ராவின் மரணம் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் ஆணையரிடம் கோரிக்கை வைத்ததாக கூறியிருந்தார். சித்ரா இறந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.