சாக்லெட் பாய் Vs பிளேபாய்.. அவர் எதார்த்தமாக சொல்ல.. இவரும் பதார்த்தமாக பதில் தர.. தேவையா தலைவர்களே
தமிழகத்தில் அரசியல் நாகரீகங்கள் மங்கி வருவதாக தற்போது கூறப்படுகிறது
சென்னை: உதயநிதிக்கு இதெல்லாம் தேவையா? இவர் அமைச்சர் ஜெயக்குமாரை பிளேபாய் என்று சொல்லவும், பதிலுக்கு அவர் இவரை சாக்லட் பாய் என்று சொல்லவும் இந்த விவகாரம் இன்னும் நிற்கவில்லை,... இப்போது திமுக குடும்பமே பிளேபாய் குடும்பம் என்று அமைச்சர் சொல்லும் அளவுக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களில் திராவிட இயக்க தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்பர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது... இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம்.
ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர் ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கொண்டு வந்த சட்டம்.. இன்று உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சி.. உதயநிதி
மரியாதை
அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் - திமுக தலைவர் கருணாநிதி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து பணியாற்றினாலும் அவர்களுக்குள்ளேயான நட்பும் மரியாதையும் இறுதி வரை குறையவில்லை. இதற்குஅடுத்ததாக, முந்தைய காலத்தினைபோல் இல்லையென்றாலும், கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும், கண்ணியத்தையும் வார்த்தை வரம்புகளையும் இறுதிவரை கடைபிடித்தனர்.
கண்ணியம்
மறைந்த ஜெயலலிதா, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போதாகட்டும், தி.மு.க.வை வசைபாடுவதாகட்டும், அதிலேயும் கூட ஒரு அளவுக்கோலை கடைப்பிடித்தார். அதை போன்று, தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதாவை, அந்த அம்மையார் என்றே அழைத்தார்... இத்தகைய அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது.
நாகரீகம்
ஆனால் இப்போதைய அரசியல் அப்படியா இருக்கிறது.. விமர்சனங்கள் இருக்கலாம், கேலி கிண்டல்கூட இருக்கலாம், கருத்து தாக்குதல்கள் இருக்கலாம், உரிய பதிலடிகளும் இருக்கலாம்.. ஆனால், ஒரு வரைமுறை வேண்டாமா? அரசியல் நாகரீகம் வேண்டாமா? வழக்கமாக எச்.ராஜா, எஸ்வி சேகர் போன்றோர் வன்முறை சொற்களை பயன்படுத்துவார்கள்.. ஆனால், சமீப காலமாக மூத்த மற்றும் இளைய தலைவர்களும் இப்படி இறங்கிவிட்டது வருத்தம் அளிக்கிறது.
உதயநிதி
உதயநிதியை "சாக்லேட் பாய்" என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்.. பதிலுக்கு உதயநிதியும், "சொன்னவர் ப்ளேபாய்" என்கிறார்.. ஒருவர் மூத்த தலைவர், இன்னொருவர் இளைய தலைவர்.. 2 பேருமே இப்படி பேசலாமா என்பதுதான் விவாத பொருளாகவும் எழுந்துள்ளது.
சூப்பர்
மற்றொரு பக்கம் சூப்பர்... சபாஷ்.. அமைச்சருக்கு உதயநிதியின் சரியான பதிலடி என்று பாராட்டுக்களும் குவியவே செய்கின்றன.. இதைவிட வேதனை இன்று, ஜெயக்குமார், ஒட்டுமொத்த திமுகவும் இழுத்து கொண்டு வந்து, "அந்த குடும்பமே பிளே பாய் குடும்பம்தான்" என்று சொல்லி இருக்கிறார்..
விவகாரங்கள்
இந்த விஷயத்தில் 2 பேரின் பேச்சுக்களுமே ரசிக்கக்கூடியவையாக இல்லை.. அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியின் சீனியர்.. பல பொறுப்புகளை வகித்தவர்.. தற்போதும் மக்களுக்காக பாடுபட்டு கொண்டிருப்பவர்.. அரசியல் விவகாரங்கள் அனைத்திற்கும் உரிய பதில்களை அரசு சார்பாக சொல்லி, ஒற்றை ஆளாக கெத்து காட்டுபவர்.
வருத்தம்
இப்படிப்பட்டவர், சாக்லட் பாய் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கலாமா? என்பதுதான் வருத்தமாக உள்ளது. எவை எவைகளுக்கு முக்கியத்துவம் தந்து கருத்துக்களை பேட்டிகளை தருகிறோமோ அதுதான் மக்களை திரும்பி பார்க்க வைக்கும்.. அதுதான் ஈர்க்க வைக்கும். அந்த வகையில், இதையெல்லாம் கடந்து அமைச்சர் சென்றிருக்க வேண்டும்.
கருணாநிதி
அதேபோல, வயது வித்தியாசமில்லாமல், அனுபவத்துக்கும் முக்கியத்துவம் தராமல், பதவிக்கும் முக்கியத்துவம் தராமல், அமைச்சராக இருக்கும் ஒருவரை "ப்ளேபாய்" என்று உதயநிதி சொல்லி இருக்கக்கூடாது.. யார் மீது எத்தனை கோபதாபங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் சரி, கருணாநிதி இப்படி யாரையுமே ஒரு வார்த்தை சொன்னதே கிடையாது. தேவையில்லாமல் அவரை சீண்டி, அவர் இன்றைக்கு திமுக குடும்பத்தையே சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. இதற்கு உதயநிதி என்ன பதில் வைத்திருக்கிறார்? என தெரியவில்லை. அதனால் திமுக தலைமைதான் இதையெல்லாம் கண்டித்து, அறிவுறுத்தி வழி நடத்த வேண்டும்!
உரிமை
அதிமுக, திமுக என்றில்லை.. யாருடைய தனிப்பட்ட விவகாரத்தையும் பொதுவெளியில் பேசுவதற்கு முன்பு சிந்தித்து பேச வேண்டும்.. முதலில் அப்படி தனிப்பட்ட விஷயங்களை பேச யாருக்கும் எந்த உரிமையும் முதலில் கிடையாது.. அதற்கான அவசியமும், தேவையும் இப்போது இல்லை.. நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது.. இந்த கொரோனாவை தாண்டி வர முடியவில்லை.. யார் கையிலும் காசு இல்லை.. ஆளாளுக்கு மக்கள் கோபத்திலும், வயித்தெறிச்சலிலும் உள்ளனர்.. அதனால் எந்த தலைவர்களாக இருந்தாலும் ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைத்து, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கொண்டு வந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்!