துர்நாற்றம் வீசும் சோழவரம் ஏரி நீர்.. குடிக்க பயன்படுத்த தடை.. தண்ணீரை ஆய்வு செய்யுமாறு கடிதம்
சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி நீர் துர்நாற்றம் வீசுவதால், அந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்த பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. மேலும், இந்த தண்ணீர் குடிக்க உகந்ததா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை குடிநீர் வாரியத்துக்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது சோழவரம் ஏரி. இது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த ஏரி கடந்த மே மாதம் முற்றிலும் வறண்டது. அதன் பிறகு ஏரியை ஆழப்படுத்தும் பணியினை தமிழக அரசு மேற்கொண்டது. தற்போதும் சோழவரம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்ந்தது. தற்போது 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 54 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
ஆனால் நீர் துர்நாற்றத்துடன் இருப்பதால் நீரை குடிக்க பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சென்னை குடிநீர் ஆய்வு மையத்துக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் பொன்னேரி வட்டம் சோழவரம் ஏரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நீர்வரத்து இருந்தது. இந்த தண்ணீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை மக்கள், கால்நடைகள் குடிநீருக்கு பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த நீரை மக்கள் குடிநீருக்கும் பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், கால்நடைகள் அந்த தண்ணீரை பயன்படுத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சென்னை குடிநீர் ஆய்வு மையம் இந்த தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த தண்ணீரை குடிப்பதற்கு அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை பொதுப்பணித்துறை முடிவு செய்யும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.