ஏசு கிறிஸ்து அவதரித்தார் : 2021ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய தேவாலயங்களில் பிரார்த்தனை
பனி பொழியும் டிசம்பர் மாத இறுதியில் ஒரு நள்ளிரவு நேரத்தில் நட்சத்திரங்கள் உதித்து வழிகாட்ட தேவ மைந்தன் பிறப்பு நிகழ்ந்தது.
சென்னை: ஏசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 2021ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன.
தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். தேவன் எல்லாம் அறிந்தவர். தேவன் எல்லாம் வல்லவர் என்கிறது தேவனுடைய வேத ஆகமம். மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசுபிரான் அவதரித்தார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த ஏசு பிரானின் பிறந்த நாளை இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஏசு பிறந்த போது 'ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று' என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை என்று அழைக்கிறோம். "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு எனப்படும். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. இப்போதும் அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். என் நாமத்தினால் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்" என்று ஏசு சொல்லியிருக்கிறார்.
ஏசுவின் அவதார தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு நள்ளிரவு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிறகு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக 3000 பேர் பங்கேற்கும் விழாவில் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கிறிஸ்துவர்களின் புனித தலமாக போற்றப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பினை நினைவு கூறும் வகையில், குழந்தை இயேசுவின் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டபின், குடிலில் குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில், சென்னை மறைமாவட்ட பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உலகத்தில் நோய்கள் நீங்கவும் 2021 ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாகவும் பிரார்த்தனை நடைபெற்றது.
புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. குடும்பம் குடும்பமாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
சேலம் குழந்தை ஏசு தேவாலயம், கோவை மைக்கேல் ஆதித்தூதர் பேராலயம், குமரி மாவட்டம் கோட்டார் சவேரியார் பேராலயம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஒருவருக்கொருவர் அன்போடு வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.