அன்புசெழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்.. விளக்கம் அளிப்பதால் பரபரப்பு
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி பைனான்சியர் அன்புசெழியன் தன்னிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தினார்கள்.
சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடு, மதுரையில் உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் வீடு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் விஜய்யிடம் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
அதேநேரம் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி , பைனான்சியர் அன்புசெழியன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.
இந்த சம்மனுக்கு ஆஜராகி ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்தார். நடிகர் விஜய், தனக்கு ஆஜராக கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று வருமான வரித்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பைனான்சியர் அன்புசெழியன் இன்று பிற்பகல் ஆஜராகியுள்ளார். அவர் தனது இல்லம் மற்றும் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.