கனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு
சென்னை: திமுக லோக்சபா எம்.பி. கனிமொழியிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி கேள்வி எழுப்பியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினேன்.
அந்த அதிகாரியோ நீங்கள் இந்தியர் தானே என்று கேட்டார்; இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார். கனிமொழியின் இந்த பதிவு நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியது.
நீங்கள் இந்தியரா? கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட பாதுகாப்பு அதிகாரி- விமான நிலையத்தில் ஷாக்
இதனையடுத்து மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒருவிளக்கம் தெரிவித்திருக்கிறது. அதில், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மொழியைதான் பேச வலியுறுத்துவது என்பது தொழிலக பாதுகாப்பு படையின் கொள்கையும் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.
கனிமொழி விளக்கம்
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கனிமொழி கூறியதாவது:
நான் சென்னையில் இருந்து டெல்லியில் வந்து இறங்கியதும் என்னை அதிகாரிகள் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அவர்களுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். நீங்கள் ஒருபகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதாலோ அல்லது ஒரு மொழியை பேசவில்லை என்பதாலோ அல்லது ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதாலோ இந்தியர் அல்ல என சொல்ல கூடாது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமை என்பதை உணர வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.