சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீட்டித்து உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சி.ஐ.எஸ்.எப். எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, 2015 நவம்பர் 16 முதல் உயர் நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
ஆண்டுதோறும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதியுடன் பாதுகாப்பு முடிய உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் அமர்வு முன் சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன்,
சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால், உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் நிரந்தரமாக சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு கொண்டு வந்தால், வழக்கறிஞர்கள் அறைகளுக்கு வரும் வழக்கு தொடர்பவர்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீடித்து உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மத்திய தொழிற்படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டனர்.