நாங்க எங்க போவோம்.. 30 வருஷமா இங்க இருக்கோம்.. குடியுரிமை மசோதாவால் கலக்கத்தில் இலங்கை தமிழ் மக்கள்!
சென்னை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பெரும் எதிர்ப்பிற்கு இடையிலும், பரபரப்பிற்கு இடையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனால் தற்போது இரண்டு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக லோக்சபாவில் 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.ராஜ்யசபாவில் மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
நான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்
எப்படி
குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக இஸ்லாமியர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்களோ அதே அளவிற்கு தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணம் இருக்கிறது. முதலில் இந்த சட்டம் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் அகதிகளுக்கு மட்டும் பொருந்தும்.
மதம்
அடுத்து கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் அந்த மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.
தமிழ் அகதிகள்
இதை தவிர இந்தியாவில் குடியேறி உள்ள அகதிகள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆம், இதனால்தான் இந்த மசோதா இந்தியாவில் இருக்கும் ஈழ தமிழ் அகதிகளுக்கு எதிரானது. தமிழகத்தில் இலங்கை போர் காரணமாக அகதிகளாக தஞ்சம் அடைந்த தமிழ் மக்கள் இதனால் மீண்டும் இலங்கை செல்ல நேரிடும்.
மொத்தம் எத்தனை
இந்தியாவில், தமிழகத்தில் மொத்தம் 107 இலங்கை தமிழ் அகதிகள் முகாம் இருக்கிறது. இதில் மொத்தம் 65,000 பேர் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மேலும் மக்கள் இருக்கலாம், இதன் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டலாம் என்று கூறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
அதிகம் யார்
ஆம் கும்மிடிபூண்டி, ராமேஸ்வரம், திண்டுக்கல் முகாம்களில்தான் அதிக அளவில் இலங்கை தமிழ் அகதிகள் இருக்கிறார்கள். 1990ல் இருந்து இவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆம் 30 வருடமாக இவர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். இவர்களைத்தான் மத்திய அரசு வெளியேற்ற உள்ளது.
எத்தனை வருடம்
இது குறித்து கருத்து தெரிவிக்கும் இலங்கை தமிழ் அகதிகள், நாங்கள் 30 வருடமாக இங்கு இருக்கிறோம். இங்குதான் படித்தோம். இது எங்கள் தாய் நிலம் போல ஆகிவிட்டது. இங்குதான் வேலை பார்க்கிறோம். எவ்வளவு கீழ் மட்டமான வேலையாக இருந்தாலும் கூட செய்கிறோம்.
என்ன கருத்து
அரசுக்கு முடிந்த வரை உதவியாக இருக்கிறோம். நாங்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டது கிடையாது. எங்கள் குழந்தைகள் இங்குதான் படிக்கிறது. ஆனால் இப்போது எங்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். நாங்கள் எங்கே செல்வது.
மீண்டும் இலங்கை சென்றால்
மீண்டும் இலங்கைக்கு சென்றால் நல்லது நடக்காது. அங்கு நாங்கள் ஒடுக்கப்படுவோம். இனிமேல் மீண்டும் முதலில் இருந்து எங்கள் வாழ்க்கை தொடங்க முடியாது என்று அவர்கள் கூறி உள்ளனர். தமிழகத்தில் இருக்கும் அனைத்து அகதிகள் முகாம்களிலும் மக்களின் குரல் இதுவாகத்தான் இருக்கிறது.
அரசு எப்படி நடந்தும்
இவர்களை அரசு எப்படி நடத்தும். இவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களா? முகாமில் அகதிகள் அல்லது மொத்தமாக உரிமைகள் மறுக்கப்பட்டு கைதிகளாக இருப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.