ஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்! நாளைய போராட்ட பின்னணி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக நாளை போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக ஓட்டு போட்ட நிலையில், தொடர் போராட்டங்கள் மூலம் அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்க திமுக கச்சிதமாக திட்டமிட்டுள்ளது.
சமீபகாலமாக திமுக அதிரடியான வேகத்தோடு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த கட்சிக்கு கிடைத்த வாய்ப்பாக குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து பல்வேறு சமூக மக்கள் இந்தியா வந்த நிலையில் ஆறு மதத்தினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
உதய நிதி ஸ்டாலின்
இதன்பிறகு திமுக ஆக்ரோசமாக மாறியது. அதிமுகவை இதைவைத்து உள்ளாட்சி தேர்தலில் வீழ்த்தவும் மக்கள் மன்றத்தில் அதிமுகவின் நடவடிக்கையை விமர்சித்து அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டார். முதற்கட்டமாக மசோதா நிறைவேறிய ஒரே நாளில் மகன் உதயநிதி ஸ்டாலினை களம் இறக்கினார்.
உதய நிதி ஸ்டாலின்
இதன்பிறகு திமுக ஆக்ரோசமாக மாறியது. அதிமுகவை இதைவைத்து உள்ளாட்சி தேர்தலில் வீழ்த்தவும் மக்கள் மன்றத்தில் அதிமுகவின் நடவடிக்கையை விமர்சித்து அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டார். முதற்கட்டமாக மசோதா நிறைவேறிய ஒரே நாளில் மகன் உதயநிதி ஸ்டாலினை களம் இறக்கினார்.
உதயநிதி போராட்டம்
ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு துரோகம் நடந்துவிட்டதாக கூறி இந்த போராட்டத்தை திமுக இளைஞரணி தமிழகம் முழுவதும் நடத்தியது. இதில் குடியுரிமை திருத்த மசோதா நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்தார். போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.
நாடு முழுவதும்
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், டெல்லி வரை பரவி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
நாளை போராட்டம்
இந்த சூழலில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நாளை ஸ்டாலின் தலைமையில் திமுக நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்டாலின் தாக்கு
இது தொடர்பாக ஸ்டாலின் கூறுகையில் "இந்துக்கள் இந்துக்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழர்களை பாஜக இந்துக்களாக கூட மதிப்பது இல்லை. அப்படி இருக்கையில் தமிழர்கள் எப்படி இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள். கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்? இதை திருத்துவதற்கு அவசர தேவை என்ன?. அதிமுக இதற்கு எதிராக வாக்களித்து இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
திமுக பலே திட்டம்
எனவே குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மங்காய் என்பது போல் சிறுபான்மையினருக்கு ஆதரவு, தமிழர்களுக்கு ஆதரவான கட்சி நாங்கள் தான் என்பதை திமுக காட்ட விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் நெருக்கடி கொடுக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.