லீவ் விட்டாலும் செல்ல மாட்டோம்.. போராட்டம் தொடரும்.. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடாப்பிடி!
பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்டாலும் தொடர்ந்து போராட்டம் செய்வோம் என்று சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதியாக தெரிவித்துள்ளது.
சென்னை: பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்டாலும் தொடர்ந்து போராட்டம் செய்வோம் என்று சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதியாக தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு மொத்தமும் போர்க்களமாக மாறியுள்ளது. முக்கியமாக டெல்லியில் இரண்டு நாட்களாக மாபெரும் கலவரமும் போராட்டமும் நடந்து வருகிறது.
அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று பெரிய கலவரமாக மாறியது.
போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளுங்கள்.. மத்திய இணை அமைச்சர் பேச்சு.. பெரும் சர்ச்சை!
சென்னை போராட்டம்
இந்த நிலையில் சென்னையிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐஐடி, லயோலா பல்கலைக்கழகம், நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மிக தீவிரம்
இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்று திடீர் என்று போலீசார் சென்னை பல்கலைக்கழகம் உள்ளே சென்றனர். அங்கு மாணவர்கள் காலையில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியாக போராட்டம் நடந்து வந்த போதும் கூட போலீசார் மொத்தமாக உள்ளே சென்றனர்.
மறுப்பு தெரிவித்தனர்
தற்போது அங்கு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதி மாணவர்கள் உடனே விடுதியை காலி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் இதை கேட்கவில்லை. மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக முடிவை ஏற்காமல் இரவு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் குவிப்பு
இதனால் தற்போது அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் . மாணவர்களை கலைந்து செல்லும்படி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.