பா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ள நிலையில் அந்த இருகட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இடையே டெண்டர் எடுப்பது தொடர்பாக ஈரோட்டில் மோதல் ஏற்பட்டது.
இப்போது அந்த விவகாரம் பாமக நிறுவனர் ராமதாஸ் வரை சென்று, அதிமுக மீது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ.ராஜாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் பாமகவினரை டெண்டர் போட விடாமல் முட்டுக்கட்டை போட்டு கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் அவர்களை நுழையவிடாமல் செய்துள்ளனர்.
பாமக பலம்
கடந்த மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமக தலைநகர் சென்னை உட்பட 7 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும், ராஜ்யசபா சீட் ஒன்றும் வாங்கியது. ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற விக்ரவாண்டி இடைத்தேர்தல் மூலம் தங்கள் பலத்தை அதிமுகவுக்கு உணர்த்தியது பாமக.
கூட்டணி கட்டமைப்பு
மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்டமைப்போடு உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுக்கான மேயர் சீட் பற்றி முடிவெடுக்காவிட்டாலும் கூட, தேர்தல் எப்படி நடப்பினும் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு தருவது பற்றி ஒரு லிஸ்டை தயாராக வைத்திருக்கிறது அதிமுக.
டெண்டர் விவகாரம்
இந்த நிலையில் அதிமுகவினரும், பாமகவினரும் ஈரோட்டில் கடுமையாக மோதிக்கொண்டது இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாமக முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பாமகவினர், அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றஞ்சாட்டி தைலாபுரத்துக்கு தகவல் அனுப்பினர்.
அதிருப்தி
கல்குவாரிகளை டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் அதிமுகவினர், அதுவும் ஒரு எம்.எல்.ஏ. வே ஆதரவாளர்களை வைத்து பாமகவினரை தடுத்து நிறுத்தி மொத்த டெண்டரையும் அவர்களே எடுத்துக் கொண்டது ராமதாசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாம்.