ஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா?
சென்னை: ஜியோ வருகைக்குக்குப் பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் மூடப்படவுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
சுதந்திரம் அடைந்த பிறகு தனியார் வசம் இருந்த வங்கி, போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. ஆனால் இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசமாக்க துடித்து வருகின்றனர். இதில் பாஜக, காங்கிரஸ் என்றில்லாமல் இப்போது வரும் அரசுகள் அனைத்துமே தனியாருக்கு சாதகமாக இயங்குகின்றன அல்லது பொதுத்துறை நிறுவனங்களை மேலும் வளர்க்க முயற்சி எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.
ராணுவத்திலும் தனியார் பங்களிப்புகள் வரத் தொடங்கியுள்ள இந்த காலத்தில் தொலைபேசி துறையில் இருக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் -ம் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம் என்ற செய்தி தொழிலாளர்களையும் பொதுமக்களையும் கவலை கொள்ள செய்துள்ளது.
பி எஸ் என் எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 2016-17ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.4,793 கோடி இழப்பை சந்தித்துள்ளது. மொபைல், லேண்ட் லைன் மற்றும் பிராட் பேண்ட் சேவைகளை வழங்கிவரும் இந்நிறுவனம் இதுவரை 4G சேவைகளை வழங்க துவங்கவில்லை. அதோடு இந்த துறையில் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள போட்டி ஆகியவற்றையும் பி எஸ் என் எல் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பதுவும் இந்நிருவனத்திற்கான இழப்புகளுக்கான காரணங்களாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பி எஸ் என் எல் நிறுவனத்தை மூடுவது, அல்லது புதுப்பிப்பது மற்றும் அது தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்ள அரசு பி எஸ் என் எல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பி எஸ் என் எல் நிறுவனத்தை மூடினால் என்ன ஆகும் என்று அறிக்கை அளிக்குமாறு அரசு பி எஸ் என் எல் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அதுபோல நிறுவனத்தின் முதலீடுகளை திரும்ப பெறுதல் மற்றும் நிறுவனத்தை மீண்டும் புதுப்பித்தலுக்கான வாய்ப்புகள், ஆகியவற்றை ஆய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு இந்த நிதியாண்டு முதல் ஓய்வு பெறுவோரின் வயதை குறைத்தால் சேமிப்பாகும் தொகை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. தன்னார்வ ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான ஆரம்ப ஓய்வு திட்டங்கள் இது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இவையெல்லாம் இருந்தாலும் அம்பானியின் நிறுவனமான ஜியோவின் வருகைக்குப் பிறகு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்றே பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4G சேவை வழங்காவிடினும் 3G சேவையில் தங்களால் இயன்ற அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருவதாக கூறிய அவர் ஜியோ நிறுவனத்தோடு தங்களால் போட்டியிட வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். லை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாலே ஜியோ-வை விட அதிகப்படியான சலுகைகளை தங்களாலும் கொடுக்க முடியும் என்று கூறினார் அந்த அதிகாரி. பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லாமை, ஜியோவின் போட்டி என்று பல்வேறு காரணங்களால் பொதுத் துறை நிறுவனம் மூடப்படும் தருவாயில் உள்ளது அனைத்து தரப்பு மக்களையும் கவலை கொள்ள செய்துள்ளது