மதரீதியான போராட்டங்களுக்கு "நோ".. ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த எடப்பாடியார்.. குஷ்பு கைது ஏன்?
பாஜகவினர் கைது செய்யப்பட்டது சரியான செயலே என்று கூறப்படுகிறது
சென்னை: இந்து மக்களையும், எதிர்கட்சிகளையும் விமர்சித்து பேசிய சனாதன கும்பலுக்கு, எடப்பாடியார் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் என்ற ஆழமான விமர்சனம் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.. மதவெறி போராட்டங்களுக்கு தடை விதிப்பதுதான் எந்த அரசாக இருந்தாலும் கையில் எடுக்கும் ஒரே அற வழி. அதைதான் இன்று தமிழக அரசு செய்துள்ளது.. அதன்மூலம் கொரோனா அபாயத்தில் இருந்தும் தப்பி, கலவர சூழலையும் உருவாக்காமல் தடுத்து நிறுத்தி.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்துள்ளது எடப்பாடியார் அரசு!
மனு ஸ்ருமிதி பேச்சு தொடர்பாக திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளது.. இருந்தாலும் திருமா இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்று குஷ்பு அறிவித்துள்ளார். மற்றொருபுறம், குஷ்பு கைது நடவடிக்கைக்கு எல்.முருகன் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.
குஷ்புவின் இந்த கைது நடவடிக்கை சோஷியல் மீடியாவில் இருபெரும் தாக்கத்தையும் விமர்சனத்தையும் தாங்கி வருகிறது.. முதலாவதாக, இந்த விஷயத்தில் அதிமுகவுடன் நேரடியாகவே முருகனுக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
முருகன்
முருகன் சொல்கிறார், "பெண்களைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது.. அதுவும் கடலூரில் மாவட்டத்தில் மட்டும் தடை விதித்திருந்த நிலையில், சென்னையைத் தாண்டியவுடனே பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், யாரால் பிரச்சினை வரும் என போலீஸ் சொல்லும் விசிகவுக்கு சென்னையில் போராட்டம் நடத்த வழங்குகிறது... ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி வழங்குகிறது" என்று கேள்வி எழுப்புகிறார்.
பாஜக
வரும் தேர்தலில் கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா? என்ற குழப்பத்துக்கு நடுவே.. பாஜக-அதிமுக இடையே எழுந்து வரும் பல அதிருப்திகளுக்கு நடுவே, இன்றைய அதிருப்தியும் இடம் பிடித்துள்ளது.. நேரடியாகவே அதிமுக அரசை முருகன் கேள்வி எழுப்பியுள்ளது கூட்டணிக்கான அஸ்திவாரத்தை அசைப்பதாகவே தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில்,இன்றைய நிகழ்வையும் கவனிக்க வேண்டி உள்ளது.
சனாதன கும்பல்
இதில் இன்னொரு விஷயம், சத்தமில்லாமல் எடப்பாடியார் ஸ்கோர் செய்திருப்பதுதான்.. கொரோனா ஊரடங்கு காலத்தில் இடம் பெயர்ந்த இந்து மக்களையும், எதிர்கட்சிகளையும் விமர்சித்து பேசிய சனாதன கும்பலுக்கு, எடப்பாடியார் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிது.. எடப்பாடி அரசு என்றில்லை, மதவெறிப்போராட்டங்களுக்கு தடை விதிப்பதுதான் எந்த அரசாக இருந்தாலும் கையில் எடுக்கும் ஒரே அற வழி. அதைதான் இன்று தமிழக அரசு செய்துள்ளது.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்துள்ளது!
முதல்வர்
எங்கே கொரோனா காலத்தில் கூட்டம் சேர்ந்துவிடுமோ என்று நினைத்து, பெற்ற தாயின் இறுதி சடங்கை காலை நேரத்திலேயே செய்து முடித்தவர் எடப்பாடியார்.. அப்படி இருக்கும்போது, தொற்று பரவும் நேரத்தில், கைது நடவடிக்கை மேற்கொண்டு அந்த அபாயத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.. மதரீதியான போராட்ட பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடியார்!
மூத்த தலைவர்கள்
அதுமட்டுமல்ல, இன்று காலை முதல் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது, பாஜகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும்போது, இன்று வந்த குஷ்பூவை வைத்து தமிழக பாஜக தலைவர் அரசியல் செய்வது வியப்பாக உள்ளதாக சலசலக்கப்பட்டு வருகிறது.. எத்தனையோ முறை இதே முருகன், நடிகர், நடிகைகளை நம்பி தமிழக பிஜேபி கிடையாது என்று மார்தட்டி பேசியதெல்லாம் இன்று காற்றோடு போன பேச்சாகவே தெரிந்தது.
முருகன்
போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் செய்தால் கைது செய்யாமல் இருப்பார்களா என்று சட்டம் படித்த முருகனுக்கு தெரியாதா? என்ற கேள்வியும் எழவே செய்கிறது.. இதில் இன்னொன்றையும் சொல்ல தோன்றுகிறது.. இதுவரை 6 மாசமாக நம் யாரிடமும் காசு இல்லை.. மத்திய அரசு தர வேண்டிய உதவியும் நமக்கு வந்து சேரவில்லை. அது சம்பந்தமாக இதுவரை தமிழக பாஜக எந்த அழுத்தத்தையும் டெல்லி மேலிடத்துக்கு தரவில்லை.
வியப்பு
நீட் தேர்வில் பிள்ளைகள் வரிசையாக தற்கொலைகள் செய்தபோதும், பெடட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும், தமிழக மக்களை நேரடியாக பாதிக்கும் எந்த ஒரு விஷயத்துக்குமே போராட்டம் செய்யாத இந்த தமிழக பாஜக இன்று மதரீதியான விஷயத்திற்கு கொந்தளித்து கொண்டு வருவதை பார்க்கும்போது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
தமிழக மக்கள்
திமுக, அதிமுகவுக்கு தமிழக பாஜக டஃப் கொடுக்க முயன்றாலும்சரி.. குஷ்பு போன்ற பிரபலத்தை முன்னிறுத்தி தங்கள் இருப்பிடத்தை காட்டிக் கொண்டாலும் சரி.. அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையை கையில் எடுக்காதவரை எந்த கட்சியையும் நம் மக்கள் திரும்பிகூட பார்க்க மாட்டார்கள் என்றே கடந்த கால அரசியல் நமக்கு உணர்த்தும் செய்தி!