அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர், என்பது பற்றி நீண்ட நாட்களாக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம், தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யாருக்கு முதல்வர் பதவி வழங்க அதிமுக முடிவெடுக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஒன்று புரிகிறது.. எடப்பாடியாரும், ஸ்டாலினும் இதில் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.. கடும் போட்டி!
முனுசாமி பேட்டி
இந்த நிலையில்தான், இன்றைய அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் வேட்பாளர் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி. அவர் கூறியதை பாருங்கள்:
யார் முதல்வர்
அதிமுக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் அக்டோபர் 7ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தலைமை கழகத்தில் வைத்து அறிவிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கேபி முனுசாமி தெரிவித்தார்.
5 மணி நேரம்
இன்று 5 மணி நேரம் கூட்டம் நடந்தாலும், முழுமையாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எனவே கட்சி தலைமை ஒருவரிடமும், முதல்வர் பதவிக்கான போட்டி மற்ற ஒருவரிடமும் வழங்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை. யாரிடம் எந்த பணி என்பதை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஆலோசித்து 7ம் தேதி அறிவிக்க உள்ளனர்.
முதல்வர் வேட்பாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறையிலிருந்து வெளியான பிறகு அதிமுகவில் சலசலப்பு இருக்க கூடாது என்பதால் இப்போதே, முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவெடுத்து அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.