முதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்
சென்னை: முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் அதிமுகவில் உச்சகட்ட மோதல் வெடித்திருப்பது அம்பலமாகிவிட்டது. இதனையடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு படுதீவிரமாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் நேருக்கு நேர் பகிரங்கமாக மோதிக் கொண்டனர். இருவருமே தங்களையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக வாதிட்டனர்.
இது இப்போதைக்கு முடியாது என்பதால் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி தலையிட்டு, இருவரும் அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்றார். அதிமுக செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் ஆதரவாளர்களிடையே இருவரும் விமர்சித்துக் கொண்டனர். இருதரப்பும் ஆத்திரமும் கோபமும் ஓயாதவர்களாகவே இருக்கின்றனராம். இப்போதைக்கு அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சாத்தியம்தானா? என்கிற சந்தேகத்தையே அதிமுக மூத்த தலைவர்கள் முன்வைக்கின்றனர்.
அந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி!
அதனால் இருதரப்பும் பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவோம்; யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்களே முதல்வர் வேட்பாளர் என ஏற்போம் என்கிற முடிவுக்கு வந்துள்ளனராம். இதனால் பொதுக்குழுவில் பெரும்பான்மயை நிரூபிப்பதற்கான ஜரூர் பணிகளை உடனடியாக தொடங்கிவிட்டனராம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்.